ஷபூர்ஜி பலோன்ஜி குரூப்-ன் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இறந்தது மறக்க முடியாத ஒன்றாக இருக்கும் வேளையில், தொழிலதிபர்கள் மத்தியில் இவருடைய மரணம் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சைரஸ் மிஸ்திரி மரணத்திற்கு முக்கியமான காரணமாகச் சொல்லப்படுவது அவர் சீட் பெல்ட் போடாமல் இருந்தது தான். இதன் வாயிலாக ஆட்டோமொபைல் நிறுவனங்களில் சைரஸ் மிஸ்திரி-யின் மரணம் மூலம் முக்கியமான விவாதம் உருவாகியுள்ளது.
இந்த விவாதம் தற்போது அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களிலும் உருவாகி வருவதால் இனி வரும் கார்களின் புதிய மாற்றத்துடன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் இறந்த பிறகு, கார்களில் பின் இருக்கைகளுக்கான சீட் பெல்ட் அலாரத்தை அனைத்து கார்களிலும் கட்டாயமாக்க இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகிறது.
சீட் பெல்ட்
சாலை விபத்து இறப்பைக் குறைக்கும் முயற்சியாக, கார் தயாரிப்பாளர்கள், பின் இருக்கை சீட் பெல்ட்களைப் பயன்பாட்டை உறுதி செய்யும் வகையில் அலாரம் அமைப்பை நிறுவுவதைக் கட்டாயமாக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
டாடா சன்ஸ்
இந்திய நிறுவனமான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி ஞாயிற்றுக்கிழமை கார் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் பின் இருக்கையில் அமர்ந்திருந்தார் மற்றும் அவரது சீட் பெல்ட் அணியவில்லை என்று காவல்துறை அதிகாரிகளைத் தகவல்களை வெளியிட்டு இருந்தனர்.
அலாரம் எச்சரிக்கை
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு வரும் கார்களில் முன் இருக்கையில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே அலாரம் உள்ளது, தற்போது அது பின் இருக்கை சீட் பெல்ட்டுகளுக்கும் அலாரம் எச்சரிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் மரணம்
இந்தியாவில் சாலை விபத்துகளில் நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் உயிரிழப்பதாகக் கடந்த ஆண்டு உலக வங்கி கூறியது. உலகின் நான்காவது பெரிய வாகனச் சந்தையான இந்தியாவில் காரில் பயணிப்பவர்கள் அனைவரும் சீட் பெல்ட் அணிவது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சீட் பெல்ட் விதி
ஆனால் இந்த விதியை பெரும்பாலானவர்கள் மதிப்பது இல்லை, எனவே சீட் பெல்ட் விதியை கடுமையாக அமல்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் கட்கரி கூறினார். முன் மற்றும் பின் இருக்கையில் சீட் பெல்ட் போடுவதால் சாலை விபத்துகள் குறையாவிட்டாலும், உயிரிழப்புகள் குறையும்.