ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள பல முக்கிய தரவுகள் கசிந்துள்ளதாக உக்ரைன் சைபர் செக்யூரிட்டி ஆராய்ச்சியாளரும், பத்திரிக்கையாளருமான டியான்செங்கோ எச்சரித்துள்ளார்.
இந்த தரவுகள் கசிவில் சுமார் 288 மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்கள் அடங்கும் என்று கூறப்படுகிறது.
இதில் இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் முழு பெயர், வங்கிக் கணக்கு எண் மற்றும் நாமினி பெயர் என பலவும் அடங்கும். இதுபோன்ற பல முக்கிய தரவுகள் இணையத்தில் கசிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டு ஐபிகள் அடையாளம்
எனினும் இது குறித்து EPFO தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை. இது குறித்து EPFO அல்லது ஐடி அமைப்பால் சரிபார்க்கப்படவில்லை.
எனினும் செக்யூரிட்டிடிஸ்கவரி.காம் தலைவரும், பத்திரிக்கையாளருமான டியான்செங்கோ, யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் (UAN) தரவுகளுடன் இரண்டு தனித் தனி ஐபிகளை அடையாளம் கண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
முக்கிய விவரங்கள்
இந்தியாவில் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் பயன்படுத்தப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் ஆனது, ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு முக்கிய அம்சமாகும். இந்த இபிஓ-வில் ஊழியர்கள் பணிபுரியும், பணிபுரிந்த நிறுவனம் முதல் கொண்டு பான் எண், வங்கி கணக்கு விவரங்கள், முகவரி, மொபைல் எண், மெயில் ஐடி தரப்பு விபரங்களும் உண்டு.
ஐபி-க்கள் அகற்றம்
ஒரு ஐபி முகவரியில் 280 மில்லியன் தரவுகள் இருந்தாலும், மற்றொரு ஐபியில் 8.4 மில்லியன் தரவுகள் பகிரப்பட்டுள்ளன. தரவின் அளவு மற்றும் பாதுகாப்பு காரணம் கருதி வெளிப்படையாக விவரங்களை வழங்காமல் அதனை பற்றி ட்வீட் செய்ய முடிவு செய்தேன். எனது ட்வீட்டிற்கு பிறகு 12 மணி நேரத்திற்குள், அந்த ஐபிகள் இரண்டும் அகற்றப்பட்டு தற்போது கிடைக்கவில்லை என்றும் டியாச்சென்கோ கூறியுள்ளார்.
யாரால் கசிந்தது?
இந்த தகவல்கள் எப்படி இணையத்தில் கசிந்தது. யாரால் கசியவிடப்பட்டது என்பது குறித்தான முழுமையான விவரங்களை, ஆராய்ச்சியாளர் தெரிவிக்கவில்லை. எனினும் இந்தியாவினை அடிப்படையாக கொண்டதாக அந்த 2 ஐபிகளும் இருக்கலாம் என்று சந்தேகத்தினை எழுப்பியுள்ளார்.
எச்சரிக்கையாக இருங்கள்
இது உண்மையா? உண்மை நிலவரம் என்ன? என்பது தெளிவாக தெரியாவிட்டாலும், சந்தாதாரர்கள் சற்று உஷாராக இருப்பது நல்லது. உங்களது இபிஎஃப் ஓ பரிவர்த்தனையில் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் பிரச்சனை இருப்பின் தொடர்புடைய நபர்களை தொடர்பு கொள்ளலாம்.