இந்து மதத்தினை சேர்ந்த ஒரு ஆண் உயில் எதுவும் எழுதி வைக்காத பட்சத்தில், அவர் தனியாக சேர்த்து வைத்த சொத்துக்கள், இதர சொத்துக்களையும் பெற அவரின் மகளுக்கு உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்து வாரிசு சட்டத்தின் படி, இந்து பெண்கள் மற்றும் விதவைகளின் சொத்துரிமை குறித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்த வழக்கில் தான் உச்ச நீதிமன்றம் இப்படி ஒரு அதிரடியான தீர்ப்பினை வழங்கியுள்ளது.
உரிமை உண்டா?
தந்தைக்கு சட்டபூர்வமான வாரிசு இல்லாத பட்சத்தில் அவர் தனியாக சேர்த்து வைத்த சொத்துகளை பெற மகள்களுக்கு உரிமை உண்டா? சட்டம் என்ன சொல்கிறது போன்ற கேள்விகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு பதில் அளித்துள்ளது.
மகளுக்கே உரிமை
இது குறித்து நீதிமன்றம் கூறுகையில் இறக்கும் நிலையில் ஒரு ஆண் இந்துவின் சொத்து( உயில் இல்லாமல்) சுயமாகக் சம்பாதித்த சொத்தாகவோ அல்லது ஒரு காப்பாளர் அல்லது குடும்பச் சொத்தை பிரித்து வாங்கியதாக இருந்தால், அது இறந்தவரின் உறவினர்களை விட, இறந்தவரின் மகளுக்கே உரிமை உண்டு என கூறியுள்ளது.
பழைய இந்து சட்டம்
மேலும் நீதிபதி முராரி எழுதிய 51 பக்க தீர்ப்பில், ஆண் இந்துவின் சொத்து சுயமாக சம்பாதித்த சொத்தாகவோ அல்லது குடும்ப சொத்தை பிரித்து வாங்கியதாகவோ இருந்தால் அதை விதவை அல்லது மகள் பெறுவதற்கான உரிமையை பழைய இந்து சட்டம் மட்டும் இன்றி பல நீதிமன்ற தீர்ப்புகள் நிலை நாட்டியுள்ளது என்பதையும் சுட்டிகாட்டியுள்ளார்.
இந்திய வாரிசு சட்டம் என்ன சொல்கிறது
பல்வேறு சட்டப் பிரிவுகளை சுட்டிக் காட்டி எழுதப்பட்ட இந்த தீர்ப்பில், இந்திய வாரிசு சட்டம் பிரிவு 14(I), பெண்களுக்கு சொந்தமான அனைத்து வரையறுக்கப்பட்ட சொத்துக்களையும் முழுமையான சொத்துக்களாக மாற்றுகிறது. உயில் இல்லாத பட்சத்தில், இப்படிப்பட்ட சொத்துகள் யாவும், யாருக்கு செல்ல வேண்டும் என்பதை இந்திய வாரிசு சட்டம் 1956, பிரிவு 15 விளக்குகிறது.
யாருக்கு சொத்து?
உயில் எதுவும் எழுதி வைக்காமல் ஒரு இந்து பெண் மரணம் அடைந்தால், அவரது தந்தை அல்லது தாயிடமிருந்து பெற்ற சொத்து, அவரது தந்தையின் வாரிசுகளுக்கு செல்லும். இதே கணவன் அல்லது மாமனாரால் பெறப்பட்ட சொத்துகள் கணவரின் வாரிசுகளுக்கு செல்லும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
சட்டபிரிவு 15(2)
தன்னுடைய தந்தை அல்லது தாயிடமிருந்து சொத்துக்களை பெற்றிருக்கும் ஒரு இந்துப் பெண் இறந்துவிடும் நிலையில், அந்த சொத்துக்களை எவ்வாறு பிரித்தளிக்கப்பட வேண்டும் என்பதற்கு ஒரு மாறுபட்ட நடைமுறை பிரிவு 15 (2) ல் கூறப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தின் முடிவுகளை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் இப்படி விளக்கத்தினை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.