இந்திய அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் பயணிகள் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஏர் இந்தியா ஏற்கனவே அதிகப்படியான கடனில் தத்தளித்து வரும் நிலையில், மத்திய அரசு ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்துவிட்டு தனியார்மயமாக்கத் திட்டமிட்ட நிலையில் தான் கொரோனா வந்து மொத்த திட்டத்தையும் வீணாக்கியது.
கொரோனா பாதிப்பால் விமானப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிவிட்ட நிலையில், ஏர் இந்தியா விற்பனை செய்யும் திட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டது. ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்றால் ஏர் இந்தியா நிறுவனத்தில் இருக்கும் பல ஆயிரம் ஊழியர்களின் சம்பளம் கொடுப்பது தான்.
ஏற்கனவே அதிகளவிலான கடனில் மூழ்கியிருக்கும் காரணத்தால் ஏர் இந்தியா நிர்வாகம் தற்போது முக்கியமான முடிவை எடுத்துள்ளது.
ஏர் இந்தியா முடிவு
ஏர் இந்தியா ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லாமல் நீண்ட விடுமுறை கொடுக்கப்படும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ள நிலையில், ஏர் இந்தியா ஊழியர்கள் தற்போது குறைந்தது 6 மாதம் முதல் 2 வருடம் வரையில் சம்பளம் இல்லாமல் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. இது தேவைப்பட்டால் 5 வருடம் வரையில் நீட்டிக்கப்படும் என ஏர் இந்தியா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஊழியர்களுக்குக் கடிதம்
ஜூலை 14ஆம் தேதி ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பன்சால் ஒப்புதலின் அடிப்படையில் நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்களுக்குச் சம்பளம் இல்லாமல் விடுமுறை கொடுக்கப்பட்ட உள்ளது என்றும் இந்த விடுமுறைக் காலம் ஊழியர்களின் திறன், தேவை, மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு விடுமுறைக் காலம் நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்றும் ஏர் இந்தியா நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பள குறைப்பு
கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்கத் துவங்கிய போது இந்திய எல்லைகள் விமானப் போக்குவரத்திற்காக மூடப்பட்டது, இதனால் போக்குவரத்து சேவை முடங்கி வர்த்தகம் இல்லாமல் ஏர் இந்தியா முடங்கியது. இதன் எதிரொலியாக ஏர் இந்தியா நிர்வாகம் அப்போது அனைத்து ஊழியர்களுக்கும் 10 சதவீத சம்பள குறைப்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
ஆய்வு
தற்போது எந்த ஊழியர்களுக்கு எவ்வளவு காலம் விடுமுறை கொடுக்கப்பட வேண்டும் என்பதைப் பல பிரிவுகளின் தலைவர்கள் கொண்ட கமிட்டி ஆலோசனை செய்து ஊழியர்கள் பல்வேறு திறன்களை ஆய்வு செய்து முடிவு செய்யப்பட உள்ளது.
மேலும் சம்பளம் இல்லாமல் விடுமுறை கொடுக்கப்பட்ட உள்ள ஊழியர்களின் மொத்த பட்டியலும் ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என ஏர் இந்தியா உயர்மட்ட நிர்வாகம் இந்தக் கமிட்டிக்கு உத்தரவிட்டுள்ளது.
வேறு நிறுவனம்
தற்போது சம்பளம் இல்லாமல் விடுமுறை திட்டத்தை ஏற்கும் ஊழியர்கள் விமானச் சேவையில் இருக்கும் பிற நிறுவனங்களில் ஏர் இந்தியா ஒப்புதல் இல்லாமல் பணிக்குச் சேர முடியாது என்றும், வேறு நிறுவனத்தின் பணியில் சேர்வதற்கு முன்பு கண்டிப்பாக ஏர் இந்தியா நிர்வாகம் ஒப்புதலுக்குப் பின்பு தான் வேறு நிறுவன பணியில் சேர் முடியும்.
வெளியேற விரும்பும் ஊழியர்கள் அனைவரும் ஏர் இந்தியா நிறுவனத்தில் முறையாகப் பணியில் இருந்து சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு வெளியேற வேண்டும் என்பதே இந்நிறுவனத்தின் நோக்கம் என்றும் இந்த நிறுவன அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
230 கோடி ரூபாய்
ஏர் இந்தியா நிறுவனத்தில் சுமார் 13,000 ஊழியர்கள் உள்ளனர், இவர்களின் சம்பளம் வாயிலாகவே ஒவ்வொரு மாதமும் 230 கோடி ரூபாய் செலவு செய்கிறது ஏர் இந்தியா.
செலவு கட்டுப்பாடுகள்
ICPA மற்றும் IPGD அமைப்புக் கூறுகையில், இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிறுவனத்தில் சுமார் 225 விமானங்கள் இயங்கி வரும் நிலையில் நிதியியல் பிரிவில் 250 ஊழியர்களும், HR பிரிவில் 130 ஊழியர்கள் மட்டுமே உள்ளனர்.
ஆனால் ஏர் இந்தியாவில் வெறும் 125 விமானங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், HR மற்றும் நிதியியல் பிரிவில் 1600 ஊழியர்கள் உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
விமானப் போக்குவரத்துத் துறை முடங்கியிருக்கும் இந்த நேரத்தில் ஏர் இந்தியா தனது செலவுகளைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என Indian Commercial Pilots' Association( ICPA) மற்றும் IPGD அமைப்புகள் ஏர் இந்தியா நிர்வாகத்திற்குக் கடிதம் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.