தேர்தல் நேரத்தில் மட்டும் அரசியல் தலைவர்கள், சைக்கிள் ஓட்டுவது, ஏழை எளிய மக்களின் வீடுகளில் உணவு சாப்பிடுவது, எளிமையாக நம் தெரு முனைக் கடைகளில் டீ குடிப்பது என பல விஷயங்களைச் செய்வார்கள்.
ஆனால் இப்போது ஆச்சர்யமாக, ஒரு யூனியன் பிரதேசத்தின் துணை முதல்வரே, தன் வீட்டில் இருந்து தன் அலுவலகத்துக்கு கார்களைப் பயன்படுத்தாமல், சைக்கிளில் சென்று கொண்டு இருக்கிறார். அவர் தான் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா.
என்ன ஆச்சு, ஏன் இந்த மனிதர் திடீரென கார்களைப் பயன்படுத்தாமல், சைக்கிள் ஓட்டத் தொடங்கி இருக்கிறார். இதுவும் ஒரு அரசியல் ஸ்டண்ட் தானா..? என பல கேள்விகள் எழுகிறதா..? பதில் சிம்பிள். ஆட் ஈவன் சிக்கல்.
அதென்ன ஆட் ஈவன்
அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, டெல்லியில் ஆட்சியைப் பிடித்த பின் கொண்டு வந்த ஒரு பெரிய திட்டம் தான் இந்த ஆட், ஈவன். அதாவது ஒற்றைப்படை எண்கள், இரட்டைப் படை எண்கள். இது வாகன எண்கள் மற்றும் தேதியை அடிப்படையாக கொண்டு செயல்படும் திட்டம்.
திட்ட விளக்கம்
ஒற்றைப் படை தேதிகளில் (1,3,5,7,9..), ஒற்றைப் படையில் முடியும் படி இருக்கும் பதிவு எண்கள் கொண்ட கார்களை மட்டுமே டெல்லி சாலைகளில் பயன்படுத்த முடியும். அதே போல இரட்டைப் படை தேதிகளில் (2,4,6,8,10...) இரட்டைப் படை எண்களைக் கொண்டு முடியும் பதிவு எண்களைக் கொண்ட கார்களை மட்டுமே டெல்லி சாலைகளில் பயன்படுத்த முடியும்.
இன்று முதல்
டெல்லியில் இன்று காலை 8 மணி முதல் இந்த ஒற்றைப் படை, இரட்டைப் படை விதிகள் அமலுக்கு வந்துவிட்டது. மக்கள் கார் பூலிங் செய்து கொண்டு பயணம் செய்து, நகரத்தின் காற்று மாசுபாடு அளவை குறைக்க உதவுமாறு, டெல்லி முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மக்களிடம் வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
செல்லாது
பள்ளி குழந்தைகளை அழைத்துச் செல்லும் வாகனங்கள், பிரதமர், ஆளுநர், குடியரசுத் தலைவர் போன்ற நாட்டின் மிகப் பெரிய பதவிகளில் இருப்பவர்கள், அவசர உதவி வாகனங்களான தீயணைப்புத் துறை, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள், ராணுவம் மற்றும் காவல் துறை வாகனங்களுக்கு எல்லாம் இந்த விதிகள் பொருந்ததாது, குறிப்பாக இரு சக்கர வாகனங்களுக்கும் இந்த விதிகள் பொருந்தாதாம்.
இதனால் சைக்கிள்
நம் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் கார் பதிவு எண் ஒற்றைப் படை எண் கொண்டதாம். ஆகையால் இன்று அவரின் காரை பயன்படுத்த முடியாதாம். ஆகையால் தான் சைக்கிளில் இன்று அலுவலகம் செல்வதாகச் சொல்லி இருக்கிறார். இந்த ஆட் ஈவன் திட்டத்தால் டெல்லியில் காற்று மாசுபாடு குறையும் எனவும் நம்பிக்கையாகப் பேசி இருக்கிறார். அவர் நம்பிக்கை பலிக்கட்டும். காற்று மாசு குறையட்டும்.