இந்திய ரியல் எஸ்டேட் துறை மிகவும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் பிரபலமான ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் வங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத காரணத்தால் திவாலாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் ஏற்கனவே சொந்த வீடு வாங்கும் கனவுடன் புக் செய்யப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தற்போது தங்களது வீட்டை பெற முடியாத நிலையில் உள்ளனர்.
சூப்பர்டெக் குரூப்
டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சூப்பர்டெக் குரூப்-ன் கிளை நிறுவனமான சூப்பர்டெக் லிமிடெட் என்னும் ரியல் எஸ்டேட் நிறுவனம் சுமார் 432 கோடி ரூபாய் அளவிலான கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் சூப்பர்டெக் லிமிடெட் நிறுவனத்தைத் திவால் ஆனதாக அறிவித்து உள்ளது.
NCLT தீர்ப்பு
சூப்பர்டெக் லிமிடெட் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதியில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா தாக்கல் செய்த மனுவின் மீது தீர்ப்பளித்து, NCLT கூறியது: "நிதிக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் தாமதம் அடைந்த காரணத்திற்காகத் திவாலாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சூப்பர்டெக் லிமிடெட் நிர்வாகத்தை நிர்வாகம் செய்ய ஹிதேஷ் கோயலை இடைக்காலத் தீர்மான நிபுணராக (IRP) நியமிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
PSN பிரசாத் மற்றும் ராகுல் பட்நாகர் ஆகியோர் அடங்கிய NCLT பெஞ்ச், சூப்பர்டெக் லிமிடெட் நிறுவனத்திற்குக் கடன் அளித்த யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் கடன் பெற்ற சூப்பர்டெக் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் சூப்பர்டெக் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்பது உறுதி செய்து திவாலானதாக அறிவிக்கப்பட்டது.
உத்திர பிரதேசம்
உத்திர பிரதேசத்தில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் (மேற்கு) எகோ வில்லேஜ் II திட்டம் சுமார் 1,106.45 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்திற்குப் பெரிய தொகையை யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் கொடுத்துள்ளது.
சூப்பர்டெக் லிமிடெட்
இதே போல் 2013 ஆம் ஆண்டில், சூப்பர்டெக் லிமிடெட் வங்கிகளின் கூட்டமைப்பிலிருந்து 350 கோடி ரூபாய் அளவிலான கடனை பெற்றது. இதில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா மட்டும் சுமார் 150 கோடி ரூபாய் அளித்துள்ளது. தற்போது 432 கோடி ரூபாய் அளவிலான கடனை திருப்பி அளிக்காத காரணத்தால் வழக்கு தொடுத்து உள்ளது.