இந்தியத் தலைநகரான டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனையில் படுகைகள் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதன் எதிரொலியாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போதுமான மருத்துச் சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசின் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் நிலையிலும், அவர்களுக்குப் போதிய படுக்கைகளை உருவாக்க மத்திய அரசு டெல்லி நிர்வாக அதிகாரிகளிடம் 500 ரயில் பெட்டிகளைக் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் மாற்று இடமாக உருவாக்க உத்தரவிட்டுள்ளது.
இந்த ரயில் பெட்டியில் நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க அனைத்துவிதமான வசதிகளும் இருக்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
8000 படுக்கைகள்
இந்தத் தற்காலிக ஏற்பாடு மூலம் டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டோருக்கான சிகிச்சை அளிக்கும் படுக்கைகளின் எண்ணிக்கை 8000 வரையில் உயரும் என அமித் ஷா தனது டிவிட்டரில் டெல்லி முதல்வருடன் சந்திப்புக்குப் பின் பதிவிட்டு இருந்தார்.
மத்திய அரசின் இந்த உடனடி நடவடிக்கையின் மூலம் டெல்லியில் பாதிக்கப்பட்டோருக்கு முறையாகச் சிகிச்சை வழக்க முடியும்.
சோதனை
இதேபோல் டெல்லியில் நகரம் முழுவதும் முழுவீச்சில் கொரோனா தொற்றுகுறித்து பரிசோதனை செய்ய டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அதிலும் குறிப்பாகத் தொற்று நிறைந்த இடத்தில் வீடுவீடாகச் சென்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையிலும், சுகாதார அமைப்புகளிலும் ஆக்சிஜென் சிலிண்டர்கள் மற்றும் வென்டிலேட்டர்கள் போதுமானதாக உள்ளதாக எனத் தொடர்ந்து கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
4வது இடம்
உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. துவக்கத்தில் மிகவும் குறைவான எண்ணிக்கையில் உயர்ந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை தற்போது பல ஆயிரங்களைக் கடந்து செல்கிறது.
குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை மட்டும் இந்தியாவில் சுமார் 12,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,20,000-க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
டாப் மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி ஆகியவை முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளது.
முதல் 2 இடத்தில் இருக்கும் மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகியவை நாட்டின் முக்கிய வர்த்தகம் மற்றும் பொருளாதார மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் லாக்டவுன்
கொரோனா தொற்றுக் காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஆனால் நாட்டின் பொருளாதாரமும், வர்த்தகச் சந்தையிலும் இதனால் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் லாக்டவுன் தளர்க்கப்பட்டது.
லாக்டவுன் தளர்க்கப்பட்ட நாளில் இருந்து இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமானது குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பில் உலகிலேயே 4வது இடத்தில் இந்தியா இருக்கும் நிலையில் நாட்டில் மீண்டும் லாக்டவுன் அறிவிக்கப்படுமா என்ற கேள்வி வருகிறது.
மக்களாகிய நீங்கள் என்ன சொல்கிறீர்கள்..? மக்களைக் காப்பாற்ற மீண்டும் லாக்டவுன் அறிவிக்க வேண்டுமா..? பதிலை கமெண்ட் பதிவிடும் இடத்தில் பதிவிடுங்கள்.