சப்ளை செயின் நிறுவனம் டெல்லிவரி இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஐபிஓ மூலம் பங்குகளை விற்று 5,235 கோடி ரூபாய் மூலதனத்தை திரட்டுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய எல்ஐசி ஐபிஓ இரண்டு நாட்களுக்கு முன் முடிவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது மிகப்பெரிய டெல்லிவரி ஐபிஓ முதலீட்டாளர்களை எப்படி ஈர்க்கும் என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.
விலை எவ்வளவு?
டெல்லிவரி ஐபிஓ பங்கு ஒன்றின் விலை 462 ரூபாய் முதல் 487 ரூபாய் வரையில் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள் குறைந்தது 30 பங்குகள் ஒரு லாட் என வாங்க வேண்டும். தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு 75 சதவீத பங்குகளும், ரீடெயில் முதலீட்டாளர்களுக்கு 10 சதவீத பங்குகளும், நிறுவனம் அல்லாத முதலீட்டாலர்களுக்கு 15 சதவித பங்குகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எவ்வளவு பங்குகள் விற்கப்படுகிறது?
ஐபிஓ மூலம் 5,235 கோடி ரூபாய் மூலதனத்தை திரட்ட முடிவு செய்துள்ள டெல்லிவரி, 1,235 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஆஃபர் விலையிலும், 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை புதிதாகவும் வெளியிடுகிறது.
டெல்லிவரி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள சிஏ ஸ்விப்ட் நிறுவனம் 454 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க அனுமதித்துள்ளது. சாப்ட்பாங்க் நிறுவனம் 365 கோடி ரூபாய் பங்குகளை விற்கிறது. பிற முதலீட்டாளர்கள் 365 கோடி ரூபாய் பங்குகளை விற்கிறார்கள். டெல்லிவரி இணை நிறுவனர்கள் கபில் பாரதி 5 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், மோகித் டாண்டன் 40 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், சூரஜ் சரன் 6 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ மூலம் விற்கிறார்கள்.
சலுகைகள்
எல்ஐசி ஐபிஓ ரீடெயில் முதலீட்டாளர்கள், ஊழியர்கள் பாலிசிதாரர்களுக்கு தள்ளுபடி விலையில் பங்குகளை அளித்தது. ஆனால் டெல்லிவரி நிறுவனம் ஊழியர்களுக்கு மட்டும் 25 ரூபாய் தள்ளுபடி விலையில் பங்குகளை வழங்குகிறது.
நிதி நிலை
2011-ம் ஆண்டு குர்காமை தலைமையிடமக கொண்டு தொடங்கப்பட்ட டெல்லிவரி நிறுவனத்தின் சராசரி ஆண்டு வளர்ச்சி 49 சதவீதமாக உள்ளது. இருந்தாலும் கடந்த 3 ஆண்டுகளில் இதுவரையில் ஒரு முறை கூட லாபத்தை ஈட்டவில்லை.
முக்கிய வணிகம்
டெல்லிவரி நிறுவனத்தின் முதன்மை வணிகம் தளவாட சேவைகளை உள்ளடக்கியது. டெல்லிவரி எக்ஸ்பிரஸ் பார்சல் டெலிவரி, கனரக பொருட்கள் டெலிவரி, கிடங்கு மற்றும் கட்டண வசூல் போன்ற சேவையை வழங்குகிறது.
ரிஸ்க்
இந்த நிறுவனத்தின் முக்கிய ரிஸ்க், இ-காமர்ஸ் நிறுவனங்களை அதிகம் நம்பி இருப்பதாகும். மேலும் சொந்தமாக கிளைகள் இல்லாமல் மூன்றாம் தரப்பு சேவை வழங்குனர்களுடனான ஒப்பந்தத்தின் பேரில், அவர்களது வாகனங்கள் மற்றும் மனிதவளத்தை பயன்படுத்திதான் டெல்லிவரி சேவையை வழங்கி வருகிறது.
வாங்கலாமா?
நிறுவனத்தின் பிசினஸ் மாடல், அதிநவீன பொறியியல் மற்றும் ஆட்டோமேஷன் திறன்கள் ஆகியவை செயல்படும் திறனை மேம்படுத்தவும், வரும் ஆண்டுகளில் லாபத்தை மேம்படுத்தவும் உதவும் என நம்புவதால் யெஸ் பாங்க் தரகு நிறுவனம் இந்த பங்குகளை வாங்கலாம் என தெரிவித்துள்ளது. ஏஞ்சல் ஒன் தரகு நிறுவனம் நடுநிலை மதிப்பீட்டைதான் வழங்கியுள்ளது.
முக்கிய தேதிகள்
மே 11-ம் தேதி தொடங்கிய டெல்லிவரி ஐபிஓ, மே 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. பங்குகள் மே 19-ம் தேதி அலாட் செய்யப்படும், ரீஃபண்டுகள் மே 20-ம் தேதி கிடைக்கும். டீமேட் கணக்கில் மே 23-ம் தேதி பங்குகள் வரவு வைக்கப்படும். பங்குச்சந்தையில் மே 24-ம் தேதி பட்டியலிடப்படும்.
பொறுப்பு துறப்பு
கட்டுரையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாக ஏற்படும் இழப்புகளுக்கு கிரேனியம் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜிஸ், ஆசிரியர் பொறுப்பல்ல. Tamil.Goodreturns.in பயனர்கள் எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன் நிபுணர்களுடன் சரிபார்க்க அறிவுறுத்துகிறது.