நவம்பர் 8, 2016 பிரதமர் மோடியின் அந்த உரை வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு தருணம் என்றே கூறலாம். ஒட்டுமொத்த நாடும் ஸ்தம்பித்து போனது. அப்படி ஒரு நடவடிக்கைக்கு கொண்டு வரப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது.
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஓழிக்கும் நடவடிக்கையாக 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டது. அதே சமயம் 500 ரூபாய் மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகளை அரசு வெளியிட்டது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் அடுத்த சில மாதங்கள் பெரும் சர்ச்சைகள் வெடித்தன. மக்கள் ஏடிஎம்களிலும், வங்கி வாசல்களிலும் பணத்துக்காக காத்துக் கிடந்தது மறக்க முடியாத தருணங்கள் எனலாம்.
மோடி என்ன கூறினார்?
1000, 500 ரூபாய் பணமதிப்பிழப்பு நடவடிக்கை என்பது கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கும் பொருட்டு எடுக்கப்பட்டதாக கூறினார். மேலும் பயங்கரவாதிகளுக்கு பணம் செல்லுவது தடுக்கப்படுவதோடு இந்திய பொருளாதாரமும் உயர்த்தப்படும் என்றார். நாட்டிற்கான நலன் கருதி சில சிரமங்களை மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டும். இந்த நடவடிக்கையால் ஏற்படும் பிரச்சனைகள் 50 நாட்களில் சீரடைந்து விடும் என்று மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
மன்மோகன் சிங் கருத்து
மோடி அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த சமயத்தில் கூறியிருந்தார். மேலும் பணமதிப்பிழப்பு நாட்டின் பொருளாதாரத்தின் மீதும் சமூகத்தின் மீதும் தொடுக்கப்பட்ட தாக்குதல். இதற்கு மக்கள் ஒவ்வொருவரும் சாட்சியாக உள்ளதாகவும் மன்மோகன் சிங் கூறினார். மேலும் வயது, பாலினம், மதம், தொழில் பாகுபாடு என எதுவும் இல்லாமல், நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பணமதிப்பிழப்பால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
கவனமுடன் கையாள வேண்டும்
பொருளாதாரத் தவறான போக்குகள் நீண்ட காலத்திற்கு தேசத்தை எவ்வாறு அழிக்கின்றன மற்றும் பொருளாதார கொள்கைகளை சிந்தனை மற்றும் கவனத்துடன் கையாள வேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று பணமதிப்பிழப்பு பற்றி கூறியிருந்தார். மேலும் இதனால் அடித்தட்டு மக்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மக்கள் பலரும் பல துன்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.
இது ஒரு கறுப்பு தினம்
பணமதிப்பிழப்பால் ஏற்படும் பிரச்சனைகள் 50 நாட்களில் சீரடையும் என பிரதமர் கூறியுள்ளார். ஆனால் இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இது ஒரு கறுப்பு தினம். உலகின் எந்த ஒரு ஜன நாயக நாடும் இத்தகைய நிர்பந்தத்தை திணித்ததில்லை என கடுமையாக இந்த பணமதிப்பிழப்பு பற்றி விளாசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஜிஎஸ்டி குறித்து விளாசல்
அதேபோல ஜிஎஸ்டி குறித்தும் தனது விமர்சனங்களை மன்மோகன் சிங் கூறியிருந்தார். அதில் ஜிஎஸ்டியும் பொருளாதார சரிவுக்கு வழிவகுத்தது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் அதிர்வுகளில் இருந்து வெளிவரும் முன்னரே ஜிஎஸ்டி அவசர அவசரமாக அமல்படுத்தப்பட்டது. இது சரியான நேரத்தில் அமல்படுத்தப்படவில்லை எனவும் விமர்சனம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.