சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவை சேர்ந்த விவசாயி ஒருவர் கார் வாங்க மஹிந்திரா ஷோரூமுக்கு சென்றார். அப்போது அங்கிருந்த ஊழியர் ஒருவரால் அவமானப்படுத்தப்பட்டார். இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையாக வெடித்தது. பலரும் ஆனந்த் மஹிந்திராவை டேக் செய்து தங்களது கருத்துகளை கூறி வந்தனர்.
இதற்கிடையில் மஹிந்திரா குழுமத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எங்களின் நோக்கம் சமூகங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களையும் எழுச்சி பெற செய்வதே.
கண்ணியம் முக்கியம்
மேலும் தனி நபர் கண்னியத்தினை நிலை நிறுத்துவதாகும். இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், இது குறித்து அவசர நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி சரியான நடவடிக்கை எடுக்கப்படும். ஊழியர்களுக்கு சரியான பயிற்சியுடன் ஆலோசனையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அவமானம்
சில தினங்களுக்கு முன்பு கர்நாடகாவின் துமகுருவில் உள்ள மஹிந்திரா ஷோரூமிற்கு விவசாயியான கெம்பேகவுடா சென்றிருந்தார். அவர் பொலிரோ பிக் கார் வாங்க சென்ற போது, அந்த ஷோரூமில் உள்ள விற்பனையாளர் ஒருவர், விவசாயிடம் காரின் மதிப்பு 10 லட்சம் ரூபாய், உன் பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இருக்காது என கூறி, கெம்பேகவுடாவையும் அவரது நண்பர்களையும் அவமானப்படுத்தியதாக கூறப்பட்டது.
ஊழியரிடம் சவால்
இதனால் மிகுந்த கோபமடைந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஷோரூம் பணியாளர்களுக்கு இடையே பெரும் பிரச்சனை வெடித்தது. இன்னும் ஒரு மணி நேரத்தில் பணத்தை கொண்டு வருவதாக சவால் விட்டு சென்ற கெம்பேகவுடா, மீண்டும் ஒரு மணி நேரத்தில் பணத்துடன் திரும்பி வந்துள்ளார். மேலும் ஒரே நாளில் காரை டெலிவரி செய்யுமாறும் கேட்டுள்ளார்.
உங்க ஷோரூமில் கார் வேண்டாம்
ஆனால் காரை டெலிவரி செய்ய 4 நாட்கள் ஆகும் என கூறிய ஊழியரால், கெம்பேகவுடாவும், அவரது நண்பர்களும் பெரும் கோபமடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் ஒரு கட்டத்தில் ஊழியர் மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளனர். இந்த நிலையில் தான் இறுதியாக மன்னிப்புக் கேட்டுள்ளார் ஊழியர். எனினும் அதன் பின்னர் உங்கள் ஷோரூமில் நான் கார் வாங்க விரும்பவில்லை என கெம்பேகவுடா கூறி திரும்பி சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
ஆனந்த் மஹிந்திரா ட்வீட்
இந்த சம்பவங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் பரவி வரும் நிலையில் தான், மஹிந்திரா குழுமம் இப்படி ஒரு ட்வீட்டினை போட்டுள்ளது. இதற்கிடையில் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மஹிந்திராவின் ட்வீட்டினை டேக் செய்து, கெம்பேகவுடாவை வரவேற்கிறேன் என இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்பது போல ட்வீட் போட்டுள்ளார்.