டெல்லி: ஒவ்வொரு வருடமும் பட்ஜெட் தாக்கல் செய்யும் போது, அந்த நிதி ஆண்டில் எவ்வளவு ரூபாய் நேரடி வரிகள் மூலமாக வர வேண்டும், மறைமுக வரிகள் மூலமாக அரசுக்கு வருவாய் எவ்வளவு வர வேண்டும் என இலக்கு நிர்ணயிப்பார்கள்.
இந்த 2019 - 20 நிதி ஆண்டில், நேரடி வரிகளான கார்ப்பரேட் வரி மற்றும் வருமான வரிகள் வழியாக 13.35 லட்சம் கோடி ரூபாய் வரி வசூலிக்க இலக்கு நிர்ணயித்து இருந்தார்கள். இந்த 2019 - 20 நிதி ஆண்டில் கிட்ட தட்ட 7 மாதம் முடிந்து 8-வது மாதத்தில் இருக்கிறோம். ஆனால் இதுவரை, நேரடி வரி மூலமாக வசூலிக்க வேண்டிய 13.35 லட்சம் கோடி ரூபாயில் 50 சதவிகித தொகையைக் கூட வசூலிக்கவில்லை என நிதி அமைச்சகம் வருத்தத்தில் இருக்கிறார்களாம்.
2019 - 20 நிதி ஆண்டின் இந்த 7 மாதங்களில் சுமாராக 6 லட்சம் கோடி ரூபாயை மட்டுமே வசூல் செய்து இருக்கிறார்களாம். இந்த செய்தியை நிதி அமைச்சக வட்டாரத்தில் இருக்கும் ஒரு அதிகாரியே உறுதி செய்து இருக்கிறார்.
இந்த விவகாரத்தைக் குறித்து (CBDT - Central Board of Direct Taxes) நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் பி சி மோடியிடம் கேட்ட போது, 2019 - 20 நிதி ஆண்டுக்கு, அரசு நிர்ணயித்து இருக்கும் இலக்கு தொகையை அடைய எல்லா விதமான முயற்சிகளையும் எடுத்து வருகிறோம். நிச்சயம் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை, அடைந்து விடுவார்கள் எனச் சொல்லி இருக்கிறார்.
அதோடு, கடந்த ஆண்டை விட இந்த நிதி ஆண்டில் ரீஃபண்ட் கொடுக்க வேண்டிய தொகை சுமாராக 20 சதவிகிதம் அதிகரித்து இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார் பி சி மோடி.
ஏற்கனவே மத்திய அரசு, கடந்த செப்டம்பர் 2019-ல் கார்ப்பரேட் வரியை குறைத்ததால் மட்டும் சுமாராக 1.4 லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது வரி குறைப்போடு பொருளாதார சூழல்களும் அத்தனை வலுவாக இல்லாத காரணத்தால் எப்படி நேரடி வரி வருவாய் அதிகரிக்கும் எனத் தெரியவில்லை.