உலகில் மிகவும் சிக்கலான மற்றும் கடுமையான தொழிலாளர் சட்டமும், அதிகளவில் விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டதும், இந்தியாவின் தொழிலாளர் சட்டம் தான். இந்தியா போன்ற ஊழியர்கள் நிறைந்த நாட்டின் அவர்களின் நலனைக் காப்பது முக்கியம், ஆனால் அதேவேளையில் இது நிறுவனங்களுக்குச் சுமையாக மாறும் போது நாட்டின் வர்த்தகச் சந்தை வளர்ச்சிக்குத் தடையாக மாறுகிறது.
கடுமையான தொழிலாளர் சட்டத்தின் வாயிலாக இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களால் தங்களது வர்த்தகத்தை எளிதாக விரிவாக்கம் செய்ய முடியாமல் உள்ளது. இது ஊழியர்களுக்கும் சரி, நிறுவனங்களுக்கும் சரி முக்கியப் பிரச்சனையாக விளங்குகிறது.
இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்குத் தனித்தனியே தொழிலாளர் சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஊழியர்கள் எண்ணிக்கை
மத்திய அரசின் தொழிலாளர் சட்டங்கள் பெரும்பாலும் நிறுவனங்களில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அடிப்படையில் உருவாக்கப்பட்டவை. உதாரணமாகத் தொழிற்துறை சச்சரவு விதி 1947இன் படி 100க்கும் அதிகமாக ஊழியர்களைக் கொண்ட ஒரு நிறுவனம், ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதன் மூலம் செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்கும் முன் அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும், ஆனால் இதுவே 100 ஊழியர்களுக்கும் குறைவாக இருக்கும் நிறுவனம் அரசிடம் ஒப்புதல் பெறத் தேவையில்லை.
100க்கும் குறைவான ஊழியர்கள்
இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது ஊழியர்கள் எண்ணிக்கையை 100க்கும் குறைவாகவே வைத்தே தனது வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் பெரும்பாலான நிறுவனங்கள் தொழிற்சாலை சட்டத்திற்குக் கீழ் வர மறுக்கும் காரணத்தால் 20க்கும் குறைவான ஊழியர்களை வைத்தே வர்த்தகத்தை நடத்தி வருகிறது.
பொருளாதார ஆய்வறிக்கை
2018-19 பொருளாதார ஆய்வறிக்கையின் படி இந்தியாவில் இந்தச் சிறு குறு நிறுவனங்கள் மூலம் பல தொழில் துவங்கி முதலாளியாக இருந்தாலும், வேலைவாய்ப்பும் உருவாக்குவதிலும், உற்பத்தியைப் பெருக்குவதிலும் பெரிய அளவில் பின்தங்கியுள்ளது. இந்தியப் பொருளாதாரத்தில் இந்தச் சிறு குறு நிறுவனங்களின் எண்ணிக்கையும், ஆதிக்கமும் மிகவும் அதிகம்.
50 சதவீத நிறுவனங்கள்
குறிப்பாக உற்பத்தித் துறையில் கிட்டதட்ட 50 சதவீத நிறுவனங்கள் சிறு, குறு நிறுவனங்களாகவே உள்ளது. இப்பிரிவு நிறுவனங்கள் மட்டும் நாட்டில் 14.1 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.
அரசின் பாதுகாப்பு
இதேபோல் இந்தியாவில் வகைப்படுத்தப்பட்ட மற்றும் வகைப்படுத்தப்படாத துறை என மிகப்பெரிய வேலைவாய்ப்பு சந்தை உள்ளது. இதை முறையாகக் கையாள வேண்டியது மிகவும் முக்கியமாக உள்ளது.
சிறு, குறு நிறுவனங்கள் திட்டமிட்டே ஊழியர்கள் எண்ணிக்கையைக் குறைவாக வைத்து வர்த்தகத்தை நடத்தும் காரணத்தால் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் வகைப்படுத்தப்படாத துறைக்குள் வருகிறது. இதனால் ஊழியர்களுக்கு அரசின் சலுகைகளும், பாதுகாப்புக் கிடைப்பது இல்லை.
தொழிலாளர் சட்டத்தில் மாற்றம்
எனவே நாட்டின் பொருளாதாரம் மோசமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் தொழிலாளர் சட்டத்தில் கண்டிப்பாக மாற்றம் தேவை. ஆனால் இந்த மாற்றும் தொழிலாளர்களை எந்த விதத்திலும் பாதிக்காமல், அரசின் ஈபிஎப்ஓ சலுகை, பணிநீக்கத்தில் அரசின் தலையீடு என அனைத்து விதமாகப் பலன்களையும் ஊழியர்கள் பெற வேண்டும். இதேவேளையில் நிறுவனங்களுக்குத் தனது வர்த்தகம் மற்றும் உற்பத்தியை விரிவாக்கம் செய்ய ஏதுவான தளத்தை உருவாக்க வேண்டும்.
புதிய மற்றாங்கள்
தற்போது கொண்டு வரப்பட்டு உள்ள புதிய தொழிலாளர் சட்ட மாற்றங்களில் 4 முக்கிய மாற்றங்கள் நிறுவனங்களுக்குச் சாதகமாகவும், தங்களது வர்த்தகத்தை விரிவாக்கவும் முடியும்.
1. ஒரு நிறுவனத்தில் 100 ஊழியர்களுக்கு அதிகமாக இருந்த பணிநீக்கம் செய்ய அரசிடம் ஒப்புதல் பெற வேண்டும், தற்போது இதன் அளவீடு 300ஆக உயர்ந்துள்ளது.
2. இதேபோல் தொழிற்சாலை சட்டத்திற்கு வரும் நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை 100% உயர்த்தப்பட்டு உள்ளது. மின்சாரம் பயன்படுத்தி உற்பத்தி பணியில் ஈடுபட்டு உள்ள நிறுவனத்தில் 20ஆகவும், மின்சாரம் இல்லாமல் உற்பத்தியில் ஈடுபட்டு உள்ள நிறுவனத்தில் 40 ஆகவும் உயர்த்தப்பட்டு உள்ளது.
3. இதேபோல் ஒப்பந்த ஊழியர்களைப் பயன்படுத்தும் எண்ணிக்கை 20ல் இருந்து 50ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
4. மேலும் 20க்கு அதிகமாக ஊழியர்கள் இருக்கும் நிறுவனத்தில் அனைவருக்கும் ஈபிஎப்ஓ சேவை அளிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதிய வர்த்தகத் துறைகள்
இதேபோல் புதிய தொழிலாளர் சட்டத்தில் ஆன்லைன் டாக்ஸி, உணவு டெலிவரி, மளிகை பொருட்கள் டெலிவரி, கண்டெட் மற்றும் மீடியா சேவைகள், ஈ-மார்க்கெட்ப்ளேஸ் ஆகியவற்றையும் இணைக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் இத்துறையில் இருக்கும் ஊழியர்களும் அரசின் பாதுகாப்பையும், நிறுவனங்களின் மோசடிகளைத் தடுப்பதை உறுதி செய்யப்படுகிறது.