கொரோனா வைரஸ் உலகத்தின் தலை விதியையும், உலக பொருளாதாரத்தின் போக்கையும் தன் போக்கில் மாற்றி எழுதிக் கொண்டு இருக்கிறது.
அதை தடுக்க சர்வ வல்லமை பொருந்திய அமெரிக்கா, சீனா போன்ற பொருளாதார சக்திகளாலேயே முடியவில்லை என்பதை நாம் கண் எதிரே பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.
இந்த கொரோனாவால் இந்திய ஐடி துறைக்கு இன்னொரு பெரிய சிக்கல் எழுந்து கொண்டு இருக்கிறது. என்ன சிக்கல்?
அவுட் சோர்ஸிங்
அமெரிக்காவில் ஒரு கம்பெனி இருக்கிறது. அந்த கம்பெனிக்கு தேவையான ஒருவேலையை, அவர்களே செய்தால் 100 ரூபாய் செலவாகிறது. ஆனால் இந்தியாவில் கொடுத்தால் 75 ரூபாயில் முடித்துவிடுகிறார்கள். எனவே அந்த வேலையை, இந்தியாவில் இருக்கும் ஒரு கம்பெனியை செய்து கொடுக்கச் சொல்வார்கள். இது தான் அவுட் சோர்ஸிங்.
இந்தியாவில் அவுட்சோர்ஸிங்
கடந்த 2017-ம் ஆண்டு, நாஸ்காம் கணக்குப் படி சுமார் 40 லட்சம் இந்தியர்கள், இந்த அவுட் சோர்ஸிங்கில் வேலை பார்த்தார்களாம். சுமார் 150 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டி இருக்கிறார்களாம். இத்தனை பேருக்கு வேலையும், செல்வத்தையும் கொடுக்கும் துறை தான் இப்போது ஆபத்தில் இருக்கிறது. காரணம் கொரோனா.
வேலை நடந்தே ஆக வேண்டும்
உலகின் பல பன்னாட்டு நிறுவனங்கள் பல முக்கிய ஐடி ப்ராஜெக்ட்களை இந்திய கம்பெனிகளுக்கு அவுட் சோர்ஸ் செய்து இருக்கிறார்கள். இந்த ப்ராஜெக்ட்கள் எல்லாம் எந்த காலத்திலும் நிறுத்தி வைக்க முடியாதவைகள். உதாரணம்: வங்கி பணப் பரிமாற்றம். இந்தியாவில் இந்த ப்ராஜெக்டில் வேலை பார்ப்பவர்கள் இல்லை என்றால் ஸ்காட்லாந்து தொடங்கி சான் பிரான்சிஸ்கோ வரை பணப் பரிமாற்றங்கள் ஸ்தம்பிக்கலாம். எனவே இவர்கள் வேலை பார்த்தே ஆக வேண்டும்.
வீட்டில் இருந்து வேலை பார்ப்பது
சரி வீட்டில் இருந்து வேலை பார்க்கலாமே என்றால்... அரசு விதிமுறை பிரச்சனைகள் வருகிறதாம். பணப் பரிமாற்றம் போன்ற சென்சிடிவ் விவரங்களை வீட்டில் இருந்து கையாள்வது மிகவும் சிரமம் என்கிறார்கள். சரி அதை எல்லாம் சரி செய்து வீட்டில் இருந்து வேலை பார்க்க வைக்கலாம் என்றால் அடுத்த பிரச்சனை ரெடியாகக் காத்திருக்கிறது.
இணையம் + சாதனம்
இந்தியா போன்ற நாட்டில், குறிப்பாக பெரு நகரங்களில் நிறைய மக்கள் வாழ்வார்கள். எனவே இணையத்தின் வேகம் போதாது. இது இவர்கள் வேலைக்கு பெரிய தொல்லையாக இருக்கிறதாம். அதோடு, இந்தியாவில் இருக்கும் பல கம்பெனிகளிடம், தங்கள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு ஒரே நேரத்தில் லேப்டாப் போன்ற சாதனங்களைக் கொடுத்து வீட்டில் இருந்து வேலை வாங்க முடியாமல் தவிக்கிறார்களாம்.
வொடாபோன் இந்தியா
இப்படி வேலை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஐடி வேலைகளில் டேட்டா சென்டர் வேலைகளும் ஒன்று. எனவே சில ஊழியர்களுக்கு டேட்டா செண்டர்களிலெயே தேவையான உணவு, மளிகை சாமான்கள் எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்து தங்குவதற்கும் வசதிகளைச் செய்து கொடுத்து இருக்கிறார்களாம்.
போர் கொடி
ஆனால் வர்த்தக யூனியன்களோ, இப்படி மனிதர்களை அடைத்து வேலை வாங்குவதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஊழியர்களை, கம்பெனிகள் அலுவலகத்தில் அடைத்து வைப்பதாகச் சொல்கிறார்கள். ஊழியர்களின் பாதுகாப்பும், அவர்களை சக மனிதர்களாகவும் நடத்த வேண்டியது அவசியம் தான் அதில் மாற்றுக் கருத்து இல்லை.
கம்பெனிகள் முடிவு
அவுட் சோர்ஸிங்கில் மிக முக்கியமான வேலை கஸ்டமர் கேர் சேவைகள். இந்த கொரோனா பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்பட்டதும் இந்த கஸ்டமர் கேர் சேவைகள் தான். டெலிகாம் கம்பெனியான ஸ்பார்க் நியூசிலாந்து (Spark New Zealand) மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பு கம்பெனியான ஏசர் (Acer) ஆகிய நிறுவனங்கள், தங்கள் வாடிக்கையாளர்களிடம், கஸ்டமர் கேருக்கு அழைக்க வேண்டாம் என்றே வேண்டுகோள் வைத்திருக்கிறார்களாம். காரணம் இவர்களின் கால் செண்டர்கள் பிலிப்பைன்ஸில் இருக்கிறது. அங்கு கொரோனா லாக்டவுனால் வேலை பார்க்க ஆள் இல்லை.
ஆள் எடுத்தல்
ஆஸ்திரேலியாவின் டெல்ஸ்ரா (Telstra) & ஆப்டஸ் (Optus) போன்ற கம்பெனிகளும், பிரிட்டன் நாட்டின் வெர்ஜின் மீடியா போன்ற கம்பெனிகளுக்கும், இந்தியா & பிலிப்பைன்ஸில் அவுட்சோர்ஸிங் யூனிட்கள் இருக்கின்றன. இப்போது கொரோனா லாக் டவுனால், இந்தியாவில் வேலைகளைச் செய்ய முடியாததால், மேலே சொன்ன கம்பெனிகள், தங்கள் வேலைகளைச் செய்து கொள்ள, தங்கள் சொந்த நாட்டிலேயே ஆயிரக் கணக்கில் உடனடியாக வேலைக்கு ஆள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்களாம்.
மாற்று யோசனை
பன்னாட்டு நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) அடுத்த பெரிய மற்றும் சரியான மாற்றாகப் பார்க்கத் தொடங்கி இருக்கிறார்கள். 24 / 7 வேலை செய்யும், மனிதர்களைப் போல ஓய்வு தேவை இல்லை. செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தத் தொடங்கினால், அதன் பக்க விளைவாக மனிதர்களுக்கான வேலை வாய்ப்புகள் கொத்து கொத்தாக பறி போகும். கம்பெனிகள் எந்த சூழலிலும் தங்களுக்கான வேலைகளை செய்து கொள்ளும்.
உதாரணம்
ஏற்கனவே டெல்ஸ்ரா என்கிற ஆஸ்திரேலியாவின் டெலிகாம் கம்பெனி, 2020-ம் ஆண்டுக்குள் தன் வாடிக்கையாளர் அழைப்புகளில் சுமார் 66 சதவிகிதத்தைக் குறைக்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அது போக இவர்கள் செயற்கை நுண்ணறிவையும் (Artificial Intelligence) அதிகம் பயன்படுத்த நினைக்கிறார்கள்.
இந்தியாவுக்கு நஷ்டம்
இத்தனை நாள் இந்தியா, அவுட் சோர்ஸிங்கை வைத்துக் கொண்டு ஜாலியாக தன் ஐடி துறையை வளர்த்துக் கொண்டு இருந்தது. ஆனால் இப்போது கொரோனா பிரச்சனையால், இந்திய ஐடி கம்பெனிகளால் தங்கள் க்ளைண்ட் கம்பெனிகளுக்கு வழக்கம் போல வேலை செய்து கொடுக்க முடியவில்லை. எனவே பன்னாட்டுக் கம்பெனிகள், தற்போது தங்கள் வேலைகளைப் பார்த்துக் கொள்ள, தங்கள் சொந்த நாடுகளிலேயே ஆட்களை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதோடு Artificial Intelligence-ஐயும் அதிகம் பயன்படுத்த விரும்புகிறார்கள்.
இந்திய ஐடி ஊழியர்கள்
இது நாள் வரை, இந்தியாவில் பிசினஸ் அவுட் சோர்ஸிங் வியாபாரத்தை நம்பி வேலை பார்த்து வந்த லட்சக் கணக்கான ஐடி ஊழியர்களை, பன்னாட்டு நிறுவனங்களின் (சொந்த நாட்டிலேயே ஆள் எடுத்தல் மற்றும் AI பயன்பாடு) முடிவுகளால், வீட்டுக்கு அனுப்பப்படலாம். அதற்கு இப்போதே ஐடி கம்பெனிகளும், ஐடி ஊழியர்களும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வியாபாரத்தையும், வியாபார முறைகளையும் மாற்றிக் கொள்வது நல்லது.