கடந்த மார்ச் 2020-ல் மத்திய ரிசர்வ் வங்கி தன் ரெப்போ ரேட் வட்டி விகிதங்களை 0.75 சதவிகிதம் வரை குறைத்துக் கொண்டது.
அதோடு அடுத்த 3 மாதங்களுக்கான இஎம்ஐ (EMI) தவணைகளைச் செலுத்தாமல் இருக்க வங்கிகள் அனுமதிக்கலாம் என்றது.
ஆர்பிஐயின் வழிகாட்டுதலின் படி பல வங்கிகள், தங்களின் கடன் வாடிக்கையாளர்களுக்கு 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளைத் தள்ளிப் போட அனுமதி கொடுத்தது.
வீட்டுக் கடன்
இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (ஐசிசி) அமைப்பின் கணக்குப் படி சுமாராக இந்தியாவில் வீட்டுக் கடன் வாங்கி இருப்பவர்களில் 65 சதவிகிதம் பேர், ஆர்பிஐ கொடுத்து இருக்கும் 3 மாத இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போடும் வசதியை பயன்படுத்திக் கொள்வார்கள் என்கிறது.
ரியல் எஸ்டேட் துறை
இப்படி 65 சதவிகிதத்தினர், தங்களின் இஎம்ஐ (EMI) தவணைகளை ஒத்திப் போடுவதால், ரியல் எஸ்டேட் துறையில் இருக்கும் நிதி நெருக்கடியை மேலும் அதிகப்படுத்திவிடும் என ஆல்பா கார்ப் டெவலெப்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி சந்தோஷ் அகர்வால் சொல்லி இருக்கிறார்.
புதிய திட்டங்கள்
கடந்த 2019-ம் ஆண்டே 2.61 லட்சம் வீடுகள் தான் இந்தியாவின் டாப் 7 நகரங்களில் விற்பனை ஆயின. ஆனால் இந்த ஆண்டில் 1.70 - 1.96 லட்சம் வீடுகள் மட்டுமே விற்பனை ஆக வாய்ப்பு இருக்கிறதாம். அதோடு 25 - 30 % குறைவாகத் தான் புதிய ரியல் எஸ்டேட் திட்டங்கள் வர வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறது அனராக் ப்ராபர்டி கன்சல்டண்ட் என்கிற நிறுவனம்.
தொடங்கிய திட்டங்கள்
பெரும்பாலான ரியல் எஸ்டேட் கம்பெனிகள், தங்கள் கையில் இருக்கும் பணத்தை எல்லாம் செலவழித்து, ஏற்கனவே வேலை நடந்து கொண்டு இருக்கும் ரியல் எஸ்டேட் திட்டங்களைத் தான் முடிக்க முயற்சிப்பார்கள். எனவே புதிய திட்டங்கள் வருவது சிரமம் தான்.
சீனா
இந்தியாவில் வீடு கட்டத் தேவையான பல மூல பொருட்கள், சீனாவில் இருந்து தான் வருகின்றன. சீனா தான் கொரோனாவின் ஊற்றுக் கண் போல இருந்ததால், மூலப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். அதோடு கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தில் சென்று முடியலாம். எனவே, சீனாவால், வீடு விலை அதிகரிக்கலாம் என மறைமுகமாகச் சொல்லிவிட்டது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
கோரிக்கை
இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒரு பக்கம் இருக்க, நகராட்சி வரிகளை ஒரு காலாண்டுக்காவது ரத்து செய்வது, வரி மற்றும் கட்டணங்களுக்குச் செலுத்த வேண்டிய தொகைகளுக்கு அபராதங்களைத் தளர்த்துவது என சில கோரிக்கைகளை அழுத்தமாக வைத்து இருக்கிறது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ்.
மாத காலம்
ஏற்கனவே கட்டுமான வேலைகள் நடந்து கொண்டிருக்கும் திட்டங்களில்... கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் இருக்கும் சிக்கல்,
கட்டுமான தொழிலாளர்கள் கிடைப்பதில் இருக்கும் சிரமம், போன்ற பிரச்சனைகள் கருத்தில் கொண்டு 6 மாத காலம் கட்டுமானத்துக்கு கெடு காலமாக கொடுக்க வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கைகளை வைத்திருக்கிறது இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ். அரசு செவி சாய்க்குமா?