கொரோனா வைரஸ் வந்த பின், எப்போது பார்த்தாலும் பொருளாதார சரிவு, வேலை இழப்பு, பணவீக்கம் போன்ற செய்திகளையே பார்த்துக் கொண்டிருந்த நமக்கு, தர்போது Ecom Express என்கிற கம்பெனி ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கிறது.
30,000 பேரை இந்த கம்பெனி வேலைக்கு எடுக்கப் போகிறார்களாம்.
எந்த எந்த நகரங்களில் வேலைக்கு ஆட்களை எடுக்கப் போகிறார்கள்? வேலைக்கு தற்காலிகமாக எடுக்கிறார்களா அல்லது நிரந்தரமாக வேலைக்கு எடுக்கிறார்களா? என்ன வேலை வாய்ப்புகளைக் கொடுக்கிறார்கள் போன்ற கேள்விகளுக்கு விடை காண்போம்.
Ecom Express
இந்த Ecom Express ஒரு டெலிவரி கம்பெனி. ஆம் ஃப்ளிப்கார்ட், அமேசான், மிந்த்ரா, பேடிஎம், ஸ்நாப் டீல் போன்ற பல முன்னனி இ காமர்ஸ் கம்பெனிகளில் செய்யப்படும் ஆர்டர்களை, வாடிக்கையாளர்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் ஒரு பெரிய டெலிவரி கம்பெனி தான் இந்த Ecom Express. இப்படி இவர்களுக்கு சுமார் 2,000-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்களாம். 2,650-க்கும் மேற்பட்ட நகரங்களில், 27,000 பின் கோட்களுக்கு தன் சேவையை வழங்கி வருகிறதாம். இவர்களுக்கு 2,932 facility center-கள் இருப்பதாக இவர்களின் வலைதளம் சொல்கிறது.
ஊழியர்கள்
கொரோன வைரஸ் பிரச்சனைக்கு முன், இந்த Ecom Express கம்பெனியில் சுமாராக 23,000 பேர் வேலை பார்த்து வந்தார்களாம். தொடர்ந்து ஆன்லைன் ஆர்டர்கள் அதிகரித்து வந்ததால், கடந்த மாதம் சுமாராக 7,500 பேரை புதிதாக வேலைக்கு எடுத்தது Ecom Express. தற்போது லாக் டவுன்கள் எல்லாம் கணிசமாக தளர்த்தப்பட்ட பின்பும், மக்கள் மளிகை சாமான்கள், மருந்துகள் தொடங்கி பல ஐட்டங்களையும் ஆன்லைனில் ஆர்டர் செய்யத் தொடங்கிவிட்டார்கள். எனவே ஆர்டர்கள் நிலையாக அதிகரித்து வருகின்றனவாம்.
பண்டிகை காலம்
கடந்த ஆண்டில் கூட, Ecom Express கம்பெனி, பண்டிகை காலத்தில் 20,000 பேரை வேலைக்கு எடுத்தார்களாம். அதே போல, இந்த ஆண்டின் பண்டிகை காலத்திலும், இ காமர்ஸ் கம்பெனிகளின் டிமாண்டை சமாளிக்க 30,000 பேரை தற்காலிகமாக வேலைக்கு எடுக்க இருக்கிறார்கள் என Ecom Express கம்பெனியின் மூத்த துணைத் தலைவர் மற்றும் முதன்மை மனித வள மேம்பாட்டு அதிகாரி செளரப் தீப் சிங்லா (Saurabh Deep Singla) சொல்லி இருக்கிறார்.
இ காமர்ஸ் வியாபாரம்
இந்திய வாடிக்கையாளர்களை நம்பி கடை விரித்து இருக்கும் இ காமர்ஸ் கம்பெனிகளுக்கு, பண்டிகை காலத்தில் தான் கணிசமான அளவில் வியாபாரம் நடக்கிறதாம். எனவே, பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பே, திடீரென அதிகரிக்கும் ஆர்டர்களை சமாளிக்க, கணிசமாக முதலீடுகளைச் செய்து, தங்களின் கெபாசிட்டியை அதிகப்படுத்திக் கொள்கிறார்கள் இ காமர்ஸ் கம்பெனிகள்.
இ காமர்ஸ் கம்பெனி அதிரடிகள்
வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய இ காமர்ஸ் நிறுவனமான ஃப்ளிப்கார்ட், புதிதாக 50,000 கிரானா கடைகளை (மளிகை கடைகளை) தன் சப்ளை செயினில் சேர்த்து இருக்கிறார்களாம். அமேசான் கம்பெனியோ, புதிதாக 5 சார்டிங் செண்டர்களையே தனியாகத் தொடங்க இருக்கிறார்களாம். அதோடு இந்தியாவில் இருக்கும் 8 சார்டிங் செண்டர்களை விரிவாக்கம் செய்ய இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
எந்த நகரங்களில் வேலை
Ecom Express கம்பெனி இந்தியாவின் மெட்ரோ நகரங்கள், அஹமதாபாத், சூரத் , விஜயவாடா, சண்டிகர், இந்தூர், பாட்னா, லக்னெள, கான்பூர், போபால், ஜெய்பூர் போன்ற நகரங்களில் ஆட்களை வேலைக்கு எடுக்கப் போகிறார்களாம். வேலைக்கு எடுக்கப்படுபவர்களில் பெரும்பாலானவர்கள் டெலிவரி செய்பவர்கள் & சார்டிங் சென்டர்களில் வேலை பார்ப்பவர்களாக இருப்பார்களாம்.