டெல்லி: இந்தியாவினை பொறுத்தவரையில் நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது பெரும் பிரச்சனையாகவே இருந்து வருகின்றது.
இந்தியாவுக்கு கொரோனாவால் நடந்த நல்ல விஷயங்களில் ஒன்று நடப்பு கணக்கு உபரி. இன்று பட்ஜெட் கூட்டத்தொடரையடுத்து, பொருளாதார ஆய்வறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட ஆய்வறிக்கையில் பல மதிப்பீடுகள், பல கணிப்புகள் என இடம்பெற்றுள்ளன. எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்தியாவின் நடப்பு கணக்கு உபரியானது நடப்பு நிதியாண்டில் ஜிடிபியில் 2% இருக்கலாம் என்றும் ஆய்வறிக்கை சுட்டிகாட்டியுள்ளது.
முக்கிய காரணம்?
இது இரு முக்கிய காரணங்களையும் தெரிவித்துள்ளது. ஒன்று கச்சா எண்ணெய் இறக்குமதி, இரண்டாவது அன்னிய முதலீடுகள் வரத்து, இவை இரண்டும் தான் இந்த உபரிக்கு வழிவகுத்ததாகவும் தெரிவித்துள்ளது. உண்மையில் நாடே கொரோனாவினால் முடங்கியிருந்த நிலையில் கூட, நாட்டில் அன்னிய முதலீடுகளின் வரத்தானது பலமாக அதிகரித்துள்ளதாக இன்று காலையில் தான் கட்டுரையில் படித்தோம்.
கச்சா எண்ணெய்யும் முக்கிய காரணம்
அதோடு கச்சா எண்ணெய் விலையானது வரலாறு காணாத சரிவினைக் கண்ட நிலையில், அரசு அந்த நேரத்தில் வாங்கி வைத்தது. இதனால் குறைவான விலையில் வாங்க முடிந்தது. இதனை லாக்டவுன் காலகட்டத்தில் வாங்கியதால், அந்த சமயத்தில் நுகர்வும் குறைவாக இருந்தது. இதனால் பெரும் அளவு சேமிக்க முடிந்ததாக அரசு ஏற்கனவே தனது அறிக்கையில் சில மாதங்களுக்கு முன்பு தான் அறிவித்தது. ஆக இதுவே இந்தியாவின் நடப்பு கணக்கு உபரி முக்கிய வழிவகுத்துள்ளது.
குறைவான தேவை
லாக்டவுன் காரணமாக கடந்த ஆண்டில் எரிபொருளுக்கான தேவை வெகுவாக குறைந்தது. ஆக இதுவும் உபரிக்கு முக்கிய பங்கு வகித்தது என்றும் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில் இந்திய சவரின் கிரெடிட் ரேட்டிங் அமைப்பு கொடுத்துள்ள மதிப்பீட்டினை பற்றி சுட்டிக் காட்டிய ஆய்வறிக்கை, இதனை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி விகிதம்
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 7.7% சரியலாம் என்றாலும், அடுத்த நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 11% ஆக வளர்ச்சி காணலாம் என்றும் கணித்துள்ளது. இது இந்தியா வளர்ச்சி பாதைக்கு சென்று கொண்டுள்ளதையே சுட்டிக் காட்டுகிறது. அதோடு இந்தியா விரைவில் வளர்ச்சியினை எட்டும். இது வி வடிவ வளர்ச்சியினைக் காணலாம் என்றும் சுட்டிக் காட்டியுள்ளது.