மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இன்று 2022 - 23ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையானது தாக்கல் செய்யப்படவுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கவுள்ளது. இந்த கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றவுள்ளார். அதன் பிறகே 2022 - 23ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையினை, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார்.
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன?
பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன? இது எதற்காக தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை யார் தாக்கல் செய்வார்கள்? இதில் கவனிக்க வேண்டிய முக்கியவிஷயங்கள் என்ன?
பொருளாதார ஆய்வறிக்கை என்பது இந்திய நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகரின் தலைமையிலான குழுவால் தயாரிக்கப்படும் ஆண்டறிக்கையாகும். இந்த அறிக்கையானது பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
என்னவெல்லாம் இருக்கும்?
பொருளாதார ஆய்வறிக்கையில் இந்திய பொருளாதாரத்தின் நடப்பு நிலை, நெருக்கடியான நேரத்தில் அரசின் நிலைப்பாடு குறித்த புரிதலையும் பெற முடியும். இதன் மூலம் பட்ஜெட்டினை எளிதாக புரிந்து கொள்ள பயன்படுகின்றது. மேலும் பட்ஜெட்டில் எந்த துறைக்கு அதிக முக்கியத்துவம் என்பதையும் புரிந்து கொள்ளலாம்.
என்ன தரவுகள் இருக்கும்?
நாட்டின் வருவாய், தொழிற்துறை உற்பத்தி, வேலைவாய்ப்பு, பணவீக்கம், வணிகம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம், விலைவாசி, விவசாய உற்பத்தி, அன்னிய செலவாணி கையிருப்பு போன்ற தகவல்களும் பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெறும். ஆக பட்ஜெட்டுக்கு முன்னதாக மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றது. பட்ஜெட் பற்றி எளிதாக புரிந்து கொள்ளவும் இது பயனுள்ளதாக இருக்கும்.
என்ன செய்ய வேண்டும்
ஏனெனில் எந்த துறையில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பதை இதன் மூலம் எளிதில் தெரிந்து கொள்ள முடியும். அரசின் தற்போதைய நிலைப்பாடு என்ன? நிதி ரீதியாக என்ன செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட விவரங்களையும் அறிய முடியும். மொத்தத்தில் நடப்பு நிதியாண்டில் என்ன நடந்தது? வரவிருக்கும் ஆண்டில் என்ன நடக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டும் ஒரு ஆவணமாகும்.
முதல் பொருளாதார ஆய்வறிக்கை
இந்தியாவில் முதல் பொருளாதார ஆய்வறிக்கையானது 1950 - 51ம் ஆண்டிற்கான அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இது 1964 வரையில் மத்திய பட்ஜெட் உடனேயே தாக்கல் செய்யப்பட்டது. அதன் பிறகு தான் தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் தாக்கல்
பொதுவாக இந்த பொருளாதார ஆய்வறிக்கையினை மத்திய தலைமை பொருளாதார ஆலோசகரே தயாரிப்பார். இந்த குழுவில் பொருளாதார நிபுணர்கள் பலரும் உள்ளனர். தற்போதைய CEA வி அனந்த நாகேஸ்வரன் தயாரித்த இந்த ஆய்வறிக்கையை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்யவுள்ளார்.
எதிர்பார்ப்பு
2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இதை தாக்கல் செய்கிறார். தற்போதைய பிரதமர் மோடி தலைமையிலான அரசின் கடைசி முழு பட்ஜெட் இதுவாகும். இதனால் இந்த பட்ஜெட் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. அதன் எதிரொலியாக இந்த ஆய்வறிக்கையும் இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.