டெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பணமோசடி புகார் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சந்தா கோச்சருக்கு, சொந்தமாக மும்பையில் உள்ள வீடு மற்றும் அவரது நிறுவனத்துக்கு தொடர்புள்ள சில சொத்துக்கள் உள்ளிட்ட மொத்தம் 78 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன என்று அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கியில் இருந்து, 1875 கோடி ரூபாய் கடன் முறைகேடாக கொடுக்கப்பட்டதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, கடந்த வருடம் அமலாக்கத்துறை சந்தா கோச்சர், தீபக் கோச்சர், வீடியோகான் புரமோட்டர் வேணுகோபால் தூத், ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது. முன்னதாக, சிபிஐ இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து இருந்தது.
தூத் நிறுவனத்தால் துவங்கப்பட்ட சுப்ரீம் எனர்ஜி, மற்றும் தீபக் கோச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள நுபவர் நிறுவனம் ஆகியவையும், எஃப்.ஐ.ஆரில் சிபிஐயால் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆரம்பகட்ட, விசாரணையின் போது, சிபிஐ 1,875 கோடி ரூபாய் மதிப்புள்ள மொத்தம் 6 கடன்கள் வீடியோகான் குழுமத்திற்கும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் ஜூன் 2009 மற்றும் அக்டோபர் 2011 க்கு இடையில் ஐசிஐசிஐ வங்கியால் வழங்கப்பட்டுள்ளளது. இதில் கொள்கை விதிமீறல் இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.
இவற்றை 2012 ஆம் ஆண்டில் ஐசிஐசிஐ வங்கி வராக்கடனாக அறிவித்தது. இதனால் வங்கிக்கு 1,730 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. இவ்வாறு தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications