டெல்லி: ஊழலுக்கு பேர் போன விஜய் மல்லையா, நிரவ் மோடிக்கு அடுத்த படியாக சஞ்சய் சிங்கால் என்றால் அது மிகையல்ல.
ஏனெனில் பூஷன் ஸ்டீல் நிறுவனம் ஏழு வருட காலத்தில் 33 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் கடன் வாங்கி விட்டும் கட்டாமல் மோசடி செய்திருப்பதாக அமலாக்க இயக்குனரகம் (ED) குற்றம் சாட்டியுள்ளது.
வங்கி கடன் மோசடி மற்றும் பண மோசடி வழக்கு தொடர்பாக பூஷன் பவர் மற்றும் பூஷன் ஸ்டீல் மீது தாக்கல் செய்யப்பட்ட தனது குற்றப்பத்திரிக்கையில் ED இதை தெரிவித்துள்ளது.
பல ஆயிரம் கோடி மோசடி
கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலத்தில் பூஷன் ஸ்டீல் நிறுவனம் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக, கடந்த வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட ED குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கிய காரணம் அந்த நிறுவனத்தின் அப்போதைய தலைவர் சஞ்சய் சிங்கால் என்றும் கூறப்படுகிறது.
பல பேர் மீது வழக்கு
சஞ்சாய் சிங்காலுடன் சேர்த்து 23 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் மோசடி செய்ததாக கூறப்படும், 2007 முதல் 2014 வரையிலான ஏழு வருட காலத்தில், 33 வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடன் கடன் வாங்கிய பணத்தை பல வழிகளில் மோசடி செய்திருப்பதாகவும், இந்த நிதியை மோசடி மூலம் பல சொத்துகள் வாங்க பயன்படுத்தியதாக சஞ்சய் சிங்கால் உள்பட 23 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மோசடி மூலம் சொத்து
பூஷன் நிறுவனம் பல சொத்துகளை சட்டத்தை மீறி வாங்கியிருப்பதாகவும், பிபிஎஸ்எல் நிறுவனத்தில் பங்கு முதலீடு, டெல்லி மற்றும் லண்டனில் அசையும் அசையா சொத்துகளை வாங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த நவம்பர் 22, 2019 அன்று கைது செய்யப்பட்ட சஞ்சய் சிங்கால் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சரியான ஆதாரம்
சமீபத்தில் சஞ்சய் சிங்காலின் கையகப்படுத்தப்ப சொத்துகள் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ளதாக கூறப்பட்டது. இதற்கு தேவையான நிதியானது பூஷன் ஸ்டீல் இருந்து திருப்பி விடப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்காக 204.3 கோடி ரூபாய் மதிப்பிலான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகளுடன் சேர்ந்து மோசடி
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ஏமாற்றுவதற்காக வங்கி ஊழியர்கள் மற்றும் பலருடன் சேர்ந்து சதி செய்ததாகவும், பூஷன் ஸ்டீல் மற்றும் பிற நிறுவனங்களுக்கு எதிராகவும் ஏப்ரல் 5, 2019 அன்று சிபிஐ தாக்கல் செய்த எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ED தற்போது இதன் அடிப்படையிலும் விசாரணையை தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
போலி ஆவணங்கள்
மேலும் பல நிறுவனங்கள் ஷெல் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களைப் பயன்படுத்தி பணத்தை திசை திருப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் போலியான ஆவணங்களை உருவாக்கி அதன் மூலம் மோசடி செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் மோசடி மூலம் 4,229.54 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாங்கியுள்ளதாகவும், அது தற்போது ED-யால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
எவ்வளவு மோசடி?
பஞ்சாப் நேஷனல் பேங்க் மற்றும் அலகாபாத் வங்கியிலிருந்து மட்டும் அல்ல, கடந்த 2007 முதல் 2014 வரையிலான காலத்தில் மட்டும், இந்த நிறுவனம் தோராயாமாக ரூ.47,204 கோடியை பெற்று மோசடி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிறுவனம் வங்கியில் பெற்ற கடனை முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.