பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தியதில் இருந்தே, அடுத்தடுத்த அதிர்ச்சியான செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளது..
ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்தே அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்புகளே இருந்து வருகின்றது.
குறிப்பாக எலான் மஸ்க் கையகப்படுத்திய முதல் நாளே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி உட்பட பல முக்கிய அதிகாரிகளை பணி நீக்கம் செய்தார். அதன் பிறகு பாதிக்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். இதுவே அந்த சமயத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்தது.
வெறும் 1300 ஊழியர்கள்
இதற்கிடையில் ட்விட்டரில் மொத்தம் சுமார் 1300 பேர் தான் உள்ளனர். அதிலும் 550 பேர் முழு நேர பொறியாளர்கள் என்றும் கூறப்பட்டது. மொத்தத்தில் சுமார் 7000 பேர் இருந்த ஒரு நிறுவனத்தில் வெறும் 1300 பேர் தான் இருக்கிறார்கள் என்பது ஓராயிரம் கேள்விகளை எழுப்பியது. ட்விட்டரின் எதிர்காலம் குறித்த கேள்வியினையும் எழுப்பியது.
ஆக்டிவ் ஊழியர்கள்
இதற்கிடையில் இது குறித்து விளக்கமளித்துள்ள எலான் மஸ்க், தற்போது டவிட்டரில் 2300 ஆக்டிவ் ஊழியர்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
மேலும் நிறுவனத்தில் இன்னும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள், பல ஆயிரம் ஒப்பந்ததாரர்கள் பாதுகாப்புடனும், நம்பிக்கையுடனும் உள்ளனர் என்றும் கூறியுள்ளார். எனது மற்ற நிறுவனத்தினை சேர்ந்த 10-க்கும் குறைவானவர்கள் தற்போது ட்விட்டரில் பணி புரிகின்றனர் என்றும் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அறிக்கைகள் சொல்வதென்ன?
எனினும் 1300 ஊழியர்கள் தான் இருப்பதாக வெளியான அறிக்கையில் சுமார் 1300 ஊழியர்களில், சுமார் 75 பேர் தற்போது விடுப்பில் உள்ளதாகவும், இதில் சுமார் 40 பொறியாளர்கள் உள்ளனர் என்றும் CNBC அறிக்கையில் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு நடவடிக்கை
எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இதன் மூலம் நிறுவனத்தை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது ஒரு புறம் எனில், மறுபுறம் ட்விட்டர் ப்ளூ டிக் திட்டத்தினையும் அறிமுகப்படுத்தியது. எனினும் இது பெரியளவில் கைகொடுக்கவில்லை. எனினும் அதில் சில திருத்தங்களை செய்து, மீண்டும் புதுப்பிக்க முயற்சி செய்து வருகின்றது.
பலரும் பணி நீக்கம்
இதற்கிடையில் எலான் மஸ்க் கையகப்படுத்தியபோது 7000 பேருக்கு மேலாக இருந்தனர். அதன் பிறகு 50% பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் நிறுவனம் 75% பணி நீக்கம் செய்யவில்லை. ட்விட்டர் மட்டுமே இந்த காலகட்டத்தில் பணி நீக்கம் செய்யவில்லை. டெக் ஜாம்பவான்களான கூகுள், அமேசான், மெட்டா உள்ளிட்ட நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன. சில தினங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனம் 12,000 பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதே அமேசான் நிறுவனமும் அதன் 18,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.