டிவிட்டர் நிறுவனத்தை டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க் வாங்க உள்ளது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
இந்த பரிவர்த்தனை முழுமையாக நிறைவேறினால் டிவிட்டர் நிறுவனத்தின் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாகக் குறிப்பிட்ட காலத்திற்கு எலன் மஸ்க் இருப்பார் என தகவல்கள் கூறுகின்றன.
டிரெண்டிங் செய்தி
டிவிட்டர் நிறுவனத்தை எலன் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்க உள்ளார் என்பது தான் கடந்த 2 வாரமாக வணிக உலகில் டிரெண்ட் ஆகி வரும் செய்தி.
மாற்றங்கள்
எலன் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தைக் கைப்பற்றிய பிறகு அதில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வருவார். பதிவுகளைத் திருத்த எடிட் பட்டன் கொண்டு வருவார், டிரம்ப் உள்ளிட்ட டிவிட்டர் நீக்கிய பிரபலங்களின் கணக்குகளை மீண்டும் கொண்டு வருவார் என்னவெல்லாம் செய்திகள் வருகின்றன.
கட்டணம்
டிவிட்டரை வணிகம் நோக்கங்களுக்குப் பயன்படுத்துபவர்களிடம் சிறிய அளவில் கட்டணம் வசூலிக்கப்படும். சாதாரண பயனர்கள் எந்த கட்டணம் இல்லாமல் டிவிட்டரை பயன்படுத்தலாம் என எலன் மஸ்க் தனது டிவிட்டர் பதிவில் புதன்கிழமை தெரிவித்து இருந்தார்.
அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி யார்?
மறுபக்கம் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு அதன் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக எலன் மஸ்க் டிவிட்டரை வாங்கிய பிறகு, அதற்கு என புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஏற்கனவே தேர்ந்தெடுத்துவிட்டார் என்னவெல்லாம் கூறப்பட்டது.
தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரி
இந்நிலையில் டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து எலன் மஸ்க் வாங்கிய பிறகு, அவரே சிறிது காலத்திற்குத் தற்காலிக தலைமை நிர்வாக அதிகாரியாகத் தொடருவார் என சி.என்.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி
டிவிட்டர் நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியாக இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பராக் அகர்வால் உள்ளார். இவருக்கு முன்பாக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை டிவிட்டர் இணை நிறுவனர் ஜாக் டோர்சி தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்தார்.
பராக் அகர்வால் விளக்கம்
டிவிட்டர் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரியாக எலன் மஸ்க் பொறுப்பேற்ற பிறகு பராக் அகர்வால் வெளியேற்றப்பட்டால், அவரது பணியாணை படி அவருக்கு 44 மில்லியன் டாலர் இழப்பீடு வழங்க வேண்டும். ஆனால் ட்விட்டர் நிறுவன பொறுப்பிலிருந்து பராக் அகர்வால் நீக்கப்பட்டார் என இரண்டு நாட்களுக்கு முன் பரவிய செய்திக்கு மறுப்பு தெரிவித்த பராக் அகர்வால் 'நாங்க இன்னும் இங்குதான் இருக்கிறோம்' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.