இந்தியாவில் மாத சம்பளக்காரர்களின் ஈபிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு வங்கி வைப்பு நிதியை விடவும் அதிகப்படியான வட்டி வருமானத்தைக் கொடுக்க மிக முக்கியக் காரணம், பிஎப் வாடிக்கையாளர்கள் கணக்கில் இருக்கும் பணத்தை ஈபிஎப்ஓ அமைப்புப் பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் அதிகப்படியான வருமானத்தில் ஒரு பகுதியை வட்டியாகக் கொடுக்கப்படுகிறது.
இந்த நிலையில் பிஎப் கணக்குகளை நிர்வாகம் செய்யும் ஈபிஎப்ஓ அமைப்பு நடத்திய கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இந்த முடிவின் மூலம் பிஎப் வாடிக்கையாளர்களுக்குத் தற்போதைய அளவை காட்டிலும் கூடுதலான வட்டி வருமானம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
EPFO அமைப்பு
இந்தியாவின் மிகப்பெரிய ஓய்வூதிய அமைப்பான EPFO நடத்திய கூட்டத்தில், இவ்வமைப்பின் முதலீட்டு வாய்ப்புகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஈபிஎப்ஓ அமைப்பு இனி வரும் காலத்தில் பொதுத்துறை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
முதலீட்டு முடிவுகள்
இதன் மூலம் EPFO அமைப்பு பங்குச்சந்தை தாண்டி உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட் மற்றும் பத்திரங்களில் முதலீடு செய்யும். எதில் எப்போது எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவ்வப்போது Finance Investment and Audit Committee (FIAC) முடிவு செய்யும்.
5% தொகை மட்டுமே
இதேபோல் பொதுத்துறை நிறுவனங்களின் உள்கட்டமைப்பு முதலீட்டு டிரஸ்ட்-ல் தனது வருடாந்திர மொத்த வைப்புத் தொகையில் 5 சதவீத தொகையை மட்டுமே முதலீடு செய்ய வேண்டும் என முடிவையும் எடுக்கப்பட்டு உள்ளது. 5 சதவீதம் மட்டுமே முதலீடு செய்யப்படும் காரணத்தால் மக்களின் பணத்திற்குப் பாதுகாப்பு அதிகம்.
4 புதிய அமைப்புகள்
EPFO அமைப்பு இந்தக் கூட்டத்தை நவம்பர் 16ஆம் தேதி நடத்தத் திட்டமிட்டு வெள்ளிக்கிழமை நடத்தியுள்ளது. முதலீடு குறித்து முடிவெடுக்கும் கூட்டம் நடப்பு ஆண்டின் மார்ச் மாதத்தில் நடந்தது அதன் பின்பு 7 மாதத்திற்குப் பின் தற்போது நடந்துள்ளது. இதேபோல் இக்கூட்டத்தில் Central Board of Trustees அமைப்பு சமூக 4 துணை பிரிவுகளை அமைக்கவும் ஒப்புதல் அளித்துள்ளது.
முதலீடுகள்
தற்போது EPFO அமைப்பு ஒரு வருடத்தில் கிடைக்கும் மொத்த வைப்புத் தொகையில் 45 -50 சதவீதத்தை அரசு பத்திரத்திலும் 35-45 சதவீதத்தைக் கடன் பத்திரத்திலும், 5-15 சதவீதத்தைப் பங்குகளிலும், 5 சதவீதத்தைக் குறுகிய காலக் கடன் திட்டத்திலும், 5 சதவீதத்தை இதர முதலீட்டுத் திட்டத்திலும் முதலீடு செய்து வருகிறது.