இந்தியாவில் கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் காரணத்தால் பிஎப் வாடிக்கையாளர்களுக்கு உதவும் விதமாக ஈபிஎப்ஓ 2வது கோவிட் அட்வான்ஸ் தொகை அதாவது 2வது முன்பணத்தைப் பெற்றுக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக EPFO அறிவித்துள்ளது.
பொதுவாகப் பிஎப் கணக்கில் இருக்கும் தொகையை மட்டுமே தனது வாடிக்கையாளர்கள் எடுத்துக்கொள்ள முடியும், ஆனால் கொரோனா தொற்றுக் காரணமாக மார்ச் 2020ல் Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) திட்டத்தின் கீழ் பிஎப் வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் அளிக்கப்பட்டது.
பிஎப் வாடிக்கையாளர்
இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு பிஎப் வாடிக்கையாளர் 3 மாத அடிப்படை சம்பளம் மற்றும் கிராக்கிப்படி அல்லது member's credit அளவில் 75 சதவீதம், இந்த இரண்டில் எது குறைவாக இருக்கிறதோ அந்தத் தொகையை முன்பணமாகப் பெறலாம்.
2வது முன்பணத்திற்கு அனுமதி
இந்தத் தொகையைக் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டவர்கள் பெற்றுச் சிகிச்சை பெறுவது மட்டும் அல்லாமல் தங்களது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திச் செய்துகொள்ள முடியும்.
ஏற்கனவே முதல் முன்பணம் அறிவித்த மத்திய அரசு தற்போது 2வது முன்பணத்தைப் பெற்றுக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.
குறைந்த சம்பளம்
இந்த முன்பணம் தொகை குறைவாக இருந்தாலும், மாதம் 15,000 ரூபாய்க்குக் குறைவாகச் சம்பளம் வாங்கும் பல கோடிப்பேருக்கும் இது பெரிய உதவியாக இருக்கும் எனத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
76 லட்சம் பேர் பலன்
மத்திய அரசு அறிவித்த முதல் தவணையில் EPFO அமைப்பு சுமார் 76 லட்சம் பேருக்கு சுமார் 18,698.15 கோடி ரூபாய் முன்பணம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் 2வது முன்பணத் திட்டத்திலும் அதிகமானோர் பலன் அடைவார்கள் எனத் தெரிகிறது.
2வது கொரோனா அலை
2வது கொரோனா அலை பெரு நகரங்களைக் காட்டிலும் சிறு கிராமம், டவுன் பகுதிகளில் இருப்போர் அதிகமாகப் பாதிக்கப்பட்டு உள்ள வேளையிலும், கொரோனாவை தாண்டி கருப்புப் பூஞ்சை போன்ற பல தொற்றுக்கள் மக்களைப் பாதித்து வரும் நிலையில் இந்த 2வது முன்பணம் சாமானிய மக்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.