ஓய்வூதிய அமைப்பான ஈபிஎப்ஓ 2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் ஊழியர்களின் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்தில் சுமார் 7,715 கோடி ரூபாய் தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளது என நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஈபிஎப்ஓ அமைப்பு
ஈபிஎப்ஓ அமைப்பு பிஎப் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் வருமானத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு காலாண்டிலும் குறிப்பிட்ட தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்யும். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைப் பிஎப் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வருமானமாக அளிக்கப்படுகிறது.
15 சதவீத முதலீட்டுக்கு அனுமதி
மத்திய அரசு, மத்திய டிரஸ்டீஸ் நிர்வாகக் குழு, ஈபிஎப் அமைப்பு ஆகியோரின் ஒப்புதலின் படி ஈபிஎப்ஓ அமைப்பு பிஎப் கணக்கில் இருக்கும் மக்களின் பணத்தில் 15 சதவீத தொகையைப் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளது.
7,715 கோடி ரூபாய்
அரசின் ஒப்புதலின் அடிப்படையில் தற்போது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் பங்குச்சந்தையில் ஈபிஎப்ஓ அமைப்பு சுமார் 7,715 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.
ராமேஷ்வர் டெலி
ஈபிஎப்ஓ அமைப்பின் முதலீட்டு அளவு குறித்துத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகப் பதில் அளித்தார். இந்த முதலீட்டு வாயிலாகத் தான் ஒவ்வொரு ஆண்டும் பிஎப் வாடிக்கையாளர்களுக்கு வட்டி வருமானத்தை அளிக்கப்படுகிறது.
வட்டி வருமானம்
பிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்குத் தற்போது ஆண்டுக்கு 8.5 சதவீதம் அளவிலான தொகைக்கு வட்டி வருமானம் அளிக்கப்படுகிறது. சந்தையில் இருக்கும் பிற சிறு சேமிப்புத் திட்டங்களை விடவும் பிஎப் கணக்கில் இருக்கும் பணத்திற்குக் கூடுதல் வட்டி வருமானம் கிடைக்கும்.
10 வருட பிஎப் வட்டி
கடந்த 10 வருடத்தில் பிஎப் கணக்கிற்கான வட்டி விகித அளவீடுகள்
2020-2021:8.5% வட்டி, 2019-2020:8.5% வட்டி, 2018-2019:8.65% வட்டி, 2017-2018:8.55% வட்டி, 2016-2017:8.65% வட்டி, 2015-2016:8.80% வட்டி, 2013-2015:8.75% வட்டி, 2012-2013:8.50% வட்டி, 2011-2012:8.25% வட்டி, 2010-2011:9.50% வட்டி, 2005-2010:8.50% வட்டி, 2004-2005:9.50% வட்டி, 2001-2004:9.50% வட்டி, 2000-2001: 12.00% ஏப்ரல் டூ ஜூன் 2001, ஜூலை 2001ல் இருந்து 11.00%
ETF வாயிலாக முதலீடு
ஈபிஎப்ஓ அமைப்பு பங்குச்சந்தையிலும் முதலீடு செய்தாலும், நேரடியாக ஒரு நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வது இல்லை. ETF வாயிலாகவே ஈபிஎப்ஓ முதலீடு செய்கிறது. இதன் ஈபிஎப்ஓ எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் மற்றும் யூடிஐ மியூச்சுவல் பண்ட் வாயிலாக முதலீடு செய்கிறது.
ஈபிஎப்ஓ அமைப்பின் முதலீடுகள்
ஈபிஎப்ஓ அமைப்பு 2020-21ஆம் நிதியாண்டில் 31,025 கோடி ரூபாயும், 2019-20ஆம் நிதியாண்டில் 32,377 கோடி ரூபாயும், 2018-19 நிதியாண்டில் 27,743 கோடி ரூபாயும் முதலீடு செய்துள்ளது. 2021-22ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் 7,715 கோடி ரூபாய் முதலீடு உடன் வர்த்தகத்தைத் துவங்கியுள்ளது.
பிஎப் வாடிக்கையாளர்கள்
மேலும் 2021-22ஆம் நிதியாண்டில் முதல் காலாண்டில் பிஎப் வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 57,846 கோடி ரூபாய் அளவிலான தொகையைப் பெற்றுள்ளது எனத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் ராமேஷ்வர் டெலி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா
மத்திய நிதியமைச்சகம் அறிவித்தஆத்மநிர்பர் பாரத் ரோஸ்கர் யோஜனா திட்டத்தின் கீழ் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டு இருந்தது. இத்திட்டத்தின் மூலம் சுமார் 91,129 நிறுவனங்கள் 25.57 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதன் வாயிலாக 1,193.18 கோடி ரூபாய் கொடுத்துள்ளது.
71.80 லட்சம் மக்களுக்குப் பலன்
மத்திய அரசு Aatmanirbhar Bharat Rozgar Yojna திட்டத்தை அக்டோபர் 1, 2020 முதல் மார்ச் 2020 வரை நீட்டித்துள்ளக் காரணத்தால் பல நிறுவனங்கள் ஆர்வத்துடன் வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் சுமார் 71.80 லட்சம் மக்கள் பயன் அடைவார்கள் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.
MSME நிறுவனங்கள்
Aatmanirbhar Bharat Rozgar Yojna திட்டத்தின் மூலம் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ள MSME நிறுவனங்களைக் காப்பாற்றவும், இக்காலகட்டத்தில் பணியில் சேருவோருக்கு 2 வருடம் பிஎப் தொகையை முழுமையாக அரசே செலுத்தும். இதனால் நிறுவனங்களின் சுமை மட்டும் அல்லாமல் ஊழியர்களும் கூடுதலான வருமானத்தைப் பெற முடியும்.
பிஎப் கணக்குடனும் ஆதார் எண் இணைப்பு
சமீபத்தில் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அனைத்து ஊழியர்களின் பிஎப் கணக்குடனும் ஆதார் எண்-ஐ இணைப்பது கட்டாயமாக்கியுள்ளது. இப்படி இணைக்காத பட்சத்தில் ஒவ்வொரு மாதமும் செலுத்தப்படும் நிறுவனப் பங்கு தொகையை ஊழியர்கள் பிஎப் கணக்கில் வைப்புச் செய்யக் கூடாது என உத்தரவிட்டுள்ளது.
இணைப்பது எப்படி..?!
பிஎப் கணக்கு வைத்துள்ளவர்கள் UAN எண் உடன் ஆதார் எண்-ஐ இணைப்பது எப்படி..?!
1. முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ இணையதளப் பக்கத்திற்குச் செல்லுங்கள்
2. உங்கள் UAN எண், பாஸ்வோர்டு மற்றும் கேப்சா ஆகியவற்றைக் கொடுத்து உள் நுழைந்திடுங்கள்.
3. மெனுவில் இருக்கும் "Manage" என்பதைக் கிளிக் செய்து, KYC கிளிக் செய்யுங்கள்
4. KYC கிளிக் செய்த உடன் புதிய பக்கத்திற்குச் செல்லும், இந்தப் பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே ஆதார் எண்-ஐ இணைத்திருந்தால் எவ்விதமான பிரச்சனையும் இல்லை.
5. ஆதார் எண் இல்லாத பட்சத்தில் ஆதார் என்பதைக் கிளிக் செய்து, உங்கள் ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள்.
6. ஆதார் எண்-ஐ பதிவிடுங்கள், அதன் பின்பு Save என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
7. Save பட்டனை கிளிக் செய்த உடன் ஆதார் தரவுகளில் பெயர், பிறந்த நாள் ஆகியவற்றைச் சரிபார்க்கப்படும்.
8. அனைத்து தரவுகளும் சரியாக இருக்கும் பட்சத்தில் அப்ரூவ் செய்யப்பட்ட KYC அறிக்கை நீங்கள் பெறுவீர்கள். ஆதார் தரவுகளுக்குக் கீழ் "Verified" என எழுதப்பட்டு இருக்கும்.