கொரோனா வைரஸ் வருவதற்கு முன்பே, புதிதாக படித்து முடித்த இளைஞர்களுக்கு வேலை கிடைப்பதில் பல சிக்கல்கள் உண்டாகி இருந்தன.
இப்போது கொரோனாவுக்குப் பின், புதிய வேலை வாய்ப்புகள் என்கிற பேச்சுக்கே இடம் இல்லை. பழய வேலை வாய்ப்புகள் திரும்ப வருவதற்கே எத்தனை மாதங்கள் அல்லது வருடங்கள் ஆகும் எனத்ட் தெரியவில்லை.
பொதுவாக வேலை இல்லா திண்டாட்டத்தை, நாம் Unemployment Rate-ஐ அடிப்படையாகக் கொண்டு தான் சொல்கிறோம்.
Unemployment Rate - CMIE
இந்தியாவின் கடந்த 30 நாட்கள் சராசரி கணக்குப் படி, ஒட்டு மொத்த இந்தியாவில் வேலை இல்லா திண்டாட்டம் 23.5 %-மாக இருக்கிறது. நகர்புறத்தில் வேலை இல்லா திண்டாட்டம் 25.6 சதவிகிதமாக இருக்கிறது. இந்தியாவின் கிராம புறங்களில் வேலை இல்லா திண்டாட்டம் 22.6 %-மாக இருக்கிறது.
EPFO கணக்கு
CMIE கணக்கு, ஒட்டு மொத்த இந்திய பொருளாதாரத்துக்குமானது என்றால், அமைப்பு சார்ந்த, ஊழியர்களுக்கான கணக்கை, இந்தியாவின் EPFO அமைப்பு தன் புதிய மாதாந்திர சராசரி பிஎஃப் வாடிக்கையாளர்களின் (Monthly Net addition) எண்ணிக்கை வழியாகச் சொல்கிறது. தரவுகள் என்ன சொல்கின்றன..? அதற்கு முன் Monthly net addition என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம்.
Monthly net addition
ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் சம்பளம் வாங்குபவர்கள் தான் EPFO திட்டத்தில் கட்டாயமாக இணைய வேண்டும். அப்படி மாதாமாதம் புதிதாக இணைபவர்களைத் தான் Monthly net addition என்கிறோம். அதில் ஒரு குட்டி சூத்திரக் கணக்கு இருக்கிறது.
Monthly net addition = புதிதாக சேர்ந்தவர்கள் + மீண்டும் பிஎஃப் பணம் கட்டுபவர்கள் - பிஎஃப் பணம் செலுத்துதவை நிறுத்தியவர்கள். ஆக இப்போது வேலை இழந்து, பிஎஃப் பணத்தை செலுத்தாதவர்கள் அதிகரித்தால் Monthly net addition கணக்கும் குறையும்.
உதாரணம்
மார்ச் 2020-ல் 100 பேர் புதிதாக வேலைக்குச் சேர்ந்து பிஎஃப் செலுத்துகிறார்கள். 20 பேர் இதற்கு முன்பே வேலை இழந்து, என்ன இருந்தவர்களும் புதிதாக வேலைக்குச் சேர்ந்து பிஎஃப் செலுத்தத் தொடங்குகிறார்கள். ஆனால் அதே மார்ச்சில் 15 பேர் வேலையை இழந்து பிஎஃப் செலுத்த முடியாமல் இருக்கிறார்கள். இப்போது மார்ச் மாதத்துக்கான Monthly net addition எவ்வளவு? (100 + 20) - 15 = 105.
நிதி ஆண்டில் - சராசரி Monthly net addition
கடந்த செப் 2017 - மார்ச் 2018 வரையான மாதங்களில் சராசரியாக 2.21 லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஃப் திட்டங்களில் சேர்ந்து கொண்டிருந்தார்களாம். அதே போல 2018 - 19 நிதி ஆண்டில் மாத சராசரியாக 5.1 லட்சம் பேர் சேர்ந்தார்களாம். 2019 - 20 நிதி ஆண்டில் கூட மாத சராசரியாக 6.54 லட்சம் பேர் சேர்ந்து இருக்கிறார்கள்.
மார்ச் 2020-ல் சரிவு
ஆனால் மாத வாரியாக கணக்கெடுத்துப் பார்த்தால், கடந்த ஜனவரி 2020-ல் 9.9 லட்சம் பேர் திட்டத்தில் சேர்ந்து இருக்கிறார்கள் (Monthly net addition). பிப்ரவரியில் 10.2 லட்சம் பேர் சேர்ந்து இருக்கிறார்கள். மார்ச் 2020-ல் திடு திப்பென 5.73 லட்சம் பேர் தான் புதிதாக சேர்ந்து இருக்கிறார்களாம். ஆக ம்ார்ச் 2020-ல் இரண்டு விஷயம் நடந்து இருக்கலாம்.
1. புதிதாக பிஎஃப் திட்டத்தில் சேர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கும்.
2. ஏற்கனவே பிஎஃப் செலுத்திக் கொண்டிருந்தவர்களின் எண்ணிக்கை குறைந்து இருக்கலாம்.
கொரோனா லீலை
ஆக, இந்த கொரோனா மாதா மாதம் சம்பளம் வாங்குபவர்களையும் கணிசமாகவே பாதித்து இருக்கிறது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இந்த கொரோனா கொடுக்கும் குடைச்சல்கள் எல்லாம் நீங்கி, எப்போது மீண்டும் மகிழ்ச்சியாக, வழக்கம் போல அலுவலகத்துக்குச் செல்வோம் என்கிற கேள்விக்கு தான் பதில் கிடைக்கவில்லை.