ஐரோப்பாவின் மிகப் பெரிய ஸ்டார்ட்-அப் மாநாட்டில் இந்தியா இந்த ஆண்டின் சிறந்த நாடு என அங்கீகாரம் பெற்று உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் 'Vivatech 2020' என்ற மிகப்பெரிய ஸ்டார்ட்அப் மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் சிறந்த நாடாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டது ஒரு மிகப்பெரிய கவுரவம் என்றும் இது உலகிற்கு இந்தியர்களின் பங்களிப்பு முக்கியம் என்பதை உணர்த்துவதாகும் என்றும் மத்திய தகவல் தொடர்பு அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.
இந்த அங்கீகாரம் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்றும் இந்த உற்சாகமான பயணத்தை நாங்கள் மேற்கொண்டு தொடர்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் அடையாளங்கள்
இந்தியாவில் ஒரு பில்லியன் ஸ்மார்ட்போன்கள், வங்கி கணக்குகள் மற்றும் பில்லியனுக்கும் அதிகமான டிஜிட்டல் அடையாளங்களை காணலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். உலகில் எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் மிகப்பெரிய அளவில் டிஜிட்டல் அடையாளங்கள் உள்ளதாகவும் எங்கள் நாட்டில் உள்ள இளைஞர்களின் ஆற்றல் போல் உலகில் நீங்கள் எங்கும் காண முடியாது என்றும் அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மேலும் கூறினார்.
தொழில்நுட்ப கண்காட்சி
'Vivatech 2020' தொழில்நுட்ப கண்காட்சியில் இந்தியாவின் கிளையை தொடங்கி வைத்த அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவில் பில்லியன்கணக்கான ஸ்மார்ட்போன்கள் மற்றும் பில்லியன்கணக்கான வங்கி கணக்குகளையும் டிஜிட்டல் அடையாளங்களை காணலாம் என்றும், இது இந்தியாவின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான தனித்துவமான பயன்பாட்டின் நிகழ்வுகளை சாத்தியப்படுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் தொழில்நுட்பம்
இந்தியா அளவுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் பயன்படுத்துவது உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை என்று கூறிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்திய பிரதமர் மோடி அவர்களின் தலைமையில் பல அற்புதமான திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்தார்.
UPI
இந்தியா தற்போது முழுவதுமாக டிஜிட்டல்மயம் ஆகிவிட்டது என்றும், அதற்கு UPI என்பது மிகவும் உன்னதமான உதாரணம் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி UPIஐ விட மிகப் பெரியதாக அடுத்து வரப்போகும் விஷயம் இருக்கலாம் என்றும் இந்தியா ஆரோக்கியமான டிஜிட்டல் இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இந்தியாவில் தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றன என்றும் இந்தியாவில் இருந்து சுமார் 65 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் அரசின் ஆதரவோடு இந்த 'Vivatech 2020' மாநாட்டில் பங்கேற்று உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவுக்கு கெளரவம்
இந்த மாநாட்டில் இந்தியாவுக்கு கிடைத்த கெளரவம் குறித்து அடல் இன்னோவேஷன் மிஷன் இயக்குநர், சிந்தன் வைஷ்ணவ் அவர்கள் கூறியபோது, 'இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன என்றும், புதுமைகளை உருவாக்கி வருகிறது என்றும், இன்று இந்தியாவின் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உலகளாவிய பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் உள்ளது என்றும் கூறினார். மேலும் உலகிற்கு புதுமையை உருவாக்கி காட்டுவதில் மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக இந்தியா இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய தலைவர்கள்
பப்ளிசிஸ் குழுமத்தின் தலைவர் மாரிஸ் லெவி அவர்கள் இதுகுறித்து கூறிய போது, கூகுள், ஐபிஎல், மைக்ரோசாப்ட் மற்றும் அடோப் ஆகியவற்றின் தலைவர்களாக இந்தியர்கள் இருக்கிறார்கள் என்றும் இந்தியர்களிடம் தனித்துவமான அமைப்பு இருக்கிறது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது என்றும் கூறினார்.
கல்விமுறை
மிகப்பெரிய கல்விமுறை இந்தியாவில் உள்ளது என்றும் இந்தியாவில் புதுமையான டிஜிட்டல் தலைவர்கள் உருவாகி வருகிறார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். பல்வேறு எதிர்ப்புகளை கடந்து இந்தியா டிஜிட்டல் முறையில் சாதித்தது மிகப்பெரிய விஷயம் என்றும் இந்தியாவை கெளரவித்த இந்தVivatech 2020' மாநாட்டின் நிர்வாகிகளுக்கு எங்கள் நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.