இதுவரை இப்படி ஒரு அருமையான முதலமைச்சரை நான் பார்த்ததே இல்லை என பிரிட்டிஷ் தூதர் தெரிவித்து இருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பஞ்சாப் முதல்வராக பதவி ஏற்ற ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான், பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் அவர்களை சந்தித்தார். சண்டிகரில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பல்வேறு முக்கிய ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பஞ்சாப் மற்றும் இங்கிலாந்து இடையே நேரடி விமானப் போக்குவரத்து தேவை என்று முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை விடுத்ததாகவும் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்வதாக பிரிட்டன் தூதர் அலெக்ஸ் எல்லிஸ் உறுதி அளித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பஞ்சாப் வளர்ச்சியில் பிரிட்டன்
மேலும் பஞ்சாப் மாநிலத்தின் கல்வி, தகவல் தொழில்நுட்பம், மற்றும் பல்வேறு தொழில் துறைகளில் பிரிட்டன் நிறுவனங்கள் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. பஞ்சாப் மாநிலத்தின் விவசாயம், தகவல் தொழில்நுட்பம், உணவு பதப்படுத்துதல், உயர் கல்வி, விளையாட்டு, பொது போக்குவரத்து குறிப்பாக மின்சார போக்குவரத்து ஆகிய துறைகளில் பிரிட்டன் நாட்டின் தொடர்பை ஏற்படுத்த முதல்வர் பகவந்த் மான் கோரிக்கை வைத்ததாகவும் அதற்கு பிரிட்டன் தூதர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
கடின உழைப்பாளி
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அலெக்ஸ் எல்லிஸ், 'பஞ்சாப் முதல்வர் மிகவும் கடின உழைப்பாளி என்றும், பஞ்சாப் மக்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறார் என்றும், இப்படி ஒரு சுறுசுறுப்பான முதல்வரை நான் பார்த்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் தொழில்நுட்பம்
மேலும் இங்கிலாந்தின் மேம்பட்ட தொழில்நுட்பத்தை பஞ்சாபில் பயன்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும் நான் செய்வேன் என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் கேட்ட அனைத்து கோரிக்கைகளையும் பிரிட்டன் அரசுக்கு அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் முதலீடு
முதலமைச்சரின் சகிப்புத்தன்மையற்ற நிலைப்பாடு, ஊழலுக்கு எதிரான நடவடிக்கை ஆகியவை மிகுந்த பாராட்டுக்குரியது என்று தெரிவித்த அலெக்ஸ் எல்லிஸ், இதன் காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் முதலீடு செய்வதற்கு தொழில் அதிபர்கள் ஆர்வம் காட்டுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார். பஞ்சாப் மாநிலத்தில் தொழில் அதிபர்களை ஈர்க்கும் முயற்சியில் ஆற்றல் மிக்க தலைவராக முதலமைச்சர் பகவந்த் மான் இருக்கிறார் என்றும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.
மகிழ்ச்சியான சந்திப்பு
இந்த சந்திப்பு குறித்து பஞ்சாப் முதல்வர் தனது சமூக வலைதளத்தில், பிரிட்டன் தூதரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் பஞ்சாபில் தொழில்கள் அமைக்க உதவி செய்யுமாறு கேட்டுக் கொண்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.