மார்ச் 2020-ல் இருந்து ஆகஸ்ட் 2020 வரையான ஆறு மாத காலத்துக்கு, இ எம் ஐ தவணைகளை ஒத்திப் போட மத்திய ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்து இருந்தது. ஆனால் வட்டியை ரத்து செய்யவில்லை. இந்த மாரிடோரியம் காலத்தில், கடன் வாங்கிய வாடிக்கையாளர்கள், கடனுக்குச் செலுத்தாத வட்டியை, கடனின் அசலோடு சேர்த்து, வட்டிக்கு வட்டி வசூலிப்பது தவறு என, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஆஜரான மத்திய அரசு, எல்லா கடன்களுக்கான வட்டியை, ஒரே மாதிரி ரத்து செய்ய முடியாது எனச் சொல்லி இருந்தது. துறை ரீதியாக வேண்டுமானால் ஏதாவது சில சலுகைகளைக் கொடுக்கலாம் எனச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு.
ஆனால் உச்ச நீதிமன்றமோ, மத்திய அரசு, தன் நிலைப்பாட்டை இன்னும் தெளிவுபடுத்த வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது. அதோடு, கொரோனா வைரஸ் பிரச்சனையால், மக்களின் நெருக்கடியான சூழலையும் கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் இருக்கக் கூடாது எனவும் சொல்லி இருக்கிறது.
உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 28-ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது. மாரடோரியம் வழங்கிய 6 மாத காலத்துக்கான வட்டியை தள்ளுபடி செய்யலாமா என்பதை, மத்திய அரசு, செப்டம்பர் 28-ம் தேதி தெளிவுபடுத்த வேண்டும்.
நிபுணர் குழு & உறுப்பினர்கள்
இந்த சூழலில் தான், மத்திய அரசு, முன்னாள் சி ஏ ஜி ராஜிவ் மெஹ்ரிஷி தலைமையில், மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து இருக்கிறது. நேற்று மாலை தான் மத்திய அரசு இந்த நிபுணர் குழுவை அறிவித்து இருக்கிறார்கள்.
இந்த நிபுணர் குழுவில், அஹமதாபாத் ஐஐஎம் கல்லூரியின் பேராசிரியர் மற்றும் முன்னாள் ஆர்பிஐ பணக் கொள்கை கமிட்டி உறுப்பினர் ரவீந்த்ரா தொலாக்கியாவும் இருக்கிறாராம்.
இவர்களோடு எஸ்பிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் ஐடிபிஐ வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஸ்ரீராம் அவர்களும் இருக்கிறாராம்.
ஏன் இந்த நிபுணர் குழு
இந்த நிபுணர் குழு, இ எம் ஐ மாரடோரியம் வழங்கப்பட்ட கடன்களுக்கான, வட்டி & வட்டிக்கான வட்டியை, மாரடோரியம் காலத்துக்கு தள்ளுபடி செய்தால், இந்தியப் பொருளாதாரத்திலும், இந்தியாவின் நிதி நிலைத்தன்மையிலும் என்ன மாதிரியான தாக்கங்கள் ஏற்படும் என்பதை மதிப்பிடுவார்களாம்.
ஒரு வாரத்துக்குள் அறிக்கை
இந்த நிபுணர் குழு, அடுத்த ஒரு வார காலத்துக்குள், வங்கி போன்ற பல தரப்பினர்களையும் கலந்து ஆலோசித்து, தன் அறிக்கையை அரசிடம் சமர்பிக்கும்.