வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 31ஆம் தேதி கடைசி தேதி என வருமான வரித்துறை அலுவலகம் அறிவித்துள்ள நிலையில் இந்த முறை நீட்டிப்பு இல்லை என்று வருமானவரித்துறை அறிவித்துள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
எனவே இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது வரை 50 சதவீத வருமான வரி தாக்கல் மட்டுமே செய்யப்பட்டுள்ளதாகவும் இன்னும் 50 சதவீதம் பேர் வருமான வரி தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
எனவே வருமான வரி தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டு வரும் நிலையில் வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் காலநீட்டிப்பு இல்லை என்பதில் உறுதியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டரில் டிரெண்ட்
இந்த நிலையில் திடீரென ட்விட்டரில் வருமான வரித் தாக்கல் செய்யக் காலநீட்டிப்பு வேண்டும் என்பதை குறிக்கும் வகையில் #Extend_Due_Date_Immediately என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹேஷ்டேக்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி இன்னும் 5 நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் கண்டிப்பாக கால அவகாசம் வேண்டும் என்றும் ட்விட்டர் பயனாளிகள் இந்த ஹேஷ்டேக் மூலம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கால அவகாசம்
இந்த ஹேஷ்டேக்கில் பலர் தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளனர் என்றும் அதில் பெரும்பாலானோர் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கேள்வி
கடந்த 3 ஆண்டுகளாக வருமான வரித் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்ட நிலையில் தற்போது மட்டும் நீட்டிக்க மறுப்பது ஏன் என்ற கேள்வியையும் பல ட்விட்டர் பயனாளிகள் எழுப்பியுள்ளனர்.
நிர்மலா சீதாராமன்
மேலும் இந்த ஹேஷ்டேக் மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடைய ட்விட்டர் பக்கத்திற்கும் ட்விட்டர் பயனாளிகள் டேக் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சரிடம் ஐடிஆர் தாக்கல் தேதியை நீட்டிக்க உதவி செய்யுங்கள் என்றும் குறைந்தபட்சம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
தருண் பஜாஜ்
இந்த நிலையில் வருவாய் செயலாளர் தருண் பஜாஜ் கூறுகையில், 2021-22 நிதியாண்டில் ஜூலை 20 ஆம் தேதிக்குள் 2.3 கோடி வருமானக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்றும், இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது என்று கூறியுள்ளார். தற்போது தினமும் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை ஐடிஆர் தாக்கல் செய்யப்படுகிறது என்றும், இது 25 லட்சம் முதல் 30 லட்சம் வரை உயர வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
கடைசி நேரத்தில்
கடந்த முறை 9-10 சதவீதம் பேர் கடைசி நாளில் தாக்கல் செய்தனர் என்றும், கடந்த முறை, 50 லட்சத்திற்கும் அதிகமானோர் கடைசி நாளில் தாக்கல் செய்தனர் என்றும், அதேபோல் இந்த முறை 1 கோடிக்கு பேருக்கும் மேல் கடைசி நாளில் தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாகவும், தருண் பஜாஜ் தெரிவித்துள்ளார்.