சான் பிரான்சிஸ்கோ: உலகத்தில் சுமார் 300 கோடி பேரை இணைக்கும் வல்லமை கொண்ட நிறுவனமாக, இன்று வரை சிம்மானசத்தில் அமர்ந்து கொண்டு இருக்கும் நிறுவனம்... ஃபேஸ்புக்.
நம் ஊர் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி பிரேசிலில் பழங்குடி மக்கள் போராட்டம் வரை எல்லாவற்றுக்கும் ஃபேஸ்புக்கின் பங்கு அளப்பரியது.
அப்படி எல்லா தரப்பு மக்களின் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும் வெளிப்படுத்தக் கூடிய இடத்தில், கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கிறது ஃபேஸ்புக். ஆனால் அந்த ஃபேஸ்புக் நிறுவனத்துக்குள்ளேயே சூழ்நிலை அத்தனை சரியாக இல்லை என்கிற லைவ் மிண்ட் பத்திரிகையின் செய்திகள்.
இனவாதம் நடவடிக்கை
ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சார்ந்தவர்களை தொடர்ந்து ஒதுக்குவது, அவர்களை சக மனிதர்களாக நடத்தாமல் ஒதுக்குவது அல்லது மரியாதைக் குறைவாக நடத்துவது, அந்த இனத்தவர்கள் எப்போதும் மற்ற இனத்தவர்களை விட கீழானவர்கள் என்கிற ரீதியில் பேசுவது அல்லது நடந்து கொள்வது போன்றவைகளை இனவாத நடவடிக்கைகள் என்று சொல்லலாம். இப்போது இந்த கொடுமை தான் உலகத்தையே இணைக்கும் ஃபேஸ்புக்கில் நடந்து கொண்டு இருப்பதாக, ஃபேஸ்புக்கின் முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
ஊழியர்கள் கருத்து
மீடியம் என்கிற ஆன்லைன் செய்தி வலைதளத்தின் வழியாக "FB Blind" என்கிற பெயரில் 12 ஃபேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்கள், தங்களை பாகுபாடு செய்தது குறித்த, ஒரு உருக்கமான கட்டுரையை எழுதி இருக்கிறார்கள். இந்த கட்டுரையை, சமீபத்தில் யூ எஸ் ஏ டுடே என்கிற அமெரிக்க பத்திரிகை வெளியிட்டு இருக்கிறது.
உண்மை இல்லை
அந்தக் கட்டுரையில் "நாங்கள் சிரித்துக் கொண்டிருப்போம். நாங்கள் இந்த துறை சார்ந்த மிகப் பெரிய ஆளுமைகளுடன் புகைப்படம் எடுத்து இன்ஸ்டாவில் பதிவிடுவோம். நாங்கள் விளம்பரங்களில் இடம் பிடிப்போம். சுமார் 300 கோடி பேரைச் சென்றடையும், ஃபேஸ்புக்கில் வேலை பார்க்க எவ்வளவு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என மகிழ்ச்சியைப் பகிர்வோம்" எனத் தொடங்குகிறார்கள்.
உண்மை நிலை
அடுத்த பத்தியில் "ஆனால் நாங்கள் உள்ளுக்குள், வருத்தப் படுவோம். கோபமாகவும், அழுத்தத்திலும் இருப்போம். இந்த இடம் எங்களுக்கானது அல்ல என்கிற ரீதியில், எங்கள் மீது சிறிதும், பெரிதுமாக கோபங்கள் வெளிப்படுத்தப்படும்" என தங்கள் உள்ளக் குமுறலைப் பதிவு செய்து இருக்கிறார்கள் அந்த 12 ஃபேஸ்புக் ஊழியர்கள்.
இவர்களுக்குமா..?
இந்த பாகுபாடு கருப்பினத்தவர்களுக்கு மட்டும் இல்லை, லத்தின் அமெரிக்கர்கள், ஆசிய பெண் ஊழியர்களுக்கும் இந்த பாகுபாடு கொடுமை நடப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள் அந்த 12 ஃபேஸ்புக் ஊழியர்கள். அதோடு அவர்கள் எப்படி பிரித்து வைக்கப்பட்டார்கள், என்ன மாதிரியான பாகுபாடுகளுக்கு ஆளானார்கள் என்கிற கதையையும், பெயர் குறிப்பிட விரும்பாமல் சொல்லி இருக்கிறார்கள்.
இவர்களே சொன்னார்களா
12 ஃபேஸ்புக் நிறுவன முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்கள் சொல்வதை எல்லாம் ஒரு பக்கம் வைத்து விடுவோம். ஃபேஸ்புக் நிறுவனத்தில் Strategic Partner Manager பதவியில் பணியாற்றிய, மார்க் லக்கி (Mark Luckie) என்கிற முன்னாள் ஊழியரும் ஃபேஸ்புக் நிறுவனத்தில், கருப்பின மக்கள் எதிர் கொள்ளும் சவால்களைக் குறித்து ஒரு ஆண்டுக்கு முன் எழுதி இருந்தார்.
டிவி பேட்டி
இந்த செய்தி மெல்ல பரவத் தொடங்கிய பின், இதைக் குறித்து சி என் பி சி டிவியிலும் கேள்வி எழுப்புகிறார்கள். அப்போது "இப்படிப்பட்ட பாகுபாடுகளுக்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். ஃபேஸ்புக் என்கிற நிறுவனம், எந்த காரணத்துக்காக ஒரு நிறுவனமாக நிற்கிறதோ, அந்த காரணத்துக்கு எதிராக இந்த செயல்கள் நடந்து இருக்கின்றன. இந்த பிரச்னையை சரி செய்ய நிறைய வேலை பார்த்து வருகிறோம்" எனச் சொல்லி இருக்கிறார் ஃபேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் பெர்ட்டி தாம்சன் (Bertie thompson).
பயம்
எங்கள் மீதான இனத் துவேஷன், பாகுபாடு, கோபம் எல்லாம் பெரிய விஷயங்களுக்கு வருவதில்லை. மிகச் சிறிய விஷயங்களில் இருந்து தான் வரத் தொடங்குகிறது. இந்த கோபம் எல்லாம் நாளாக நாளாக, எங்களை ஒரு கோட்டாவில் வந்த ஊழியராக பார்க்க வைக்கிறது. எங்கள் வார்த்தைகள் கேட்கப்படுவதில்லை, எங்களை யாரும் அங்கீகரிப்பதில்லை, எங்களை யாரும் ஏற்றுக் கொள்வதில்லை...! என முடிக்கிறார்கள்.
ஏன் பெயர் சொல்லவில்லை
ஃபேஸ்புக் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்களில், வெள்ளையர்கள் தவிர மற்ற இனத்தவர்கள், தங்கள் வேலையை நினைத்து பயப்பட வேண்டி இருக்கிறது. மற்ற இனத்தவர்களுக்கு நடக்கும் அநியாயங்களைச் மேலிடத்தில் சொல்வதற்கு கூட தங்கள் வேலை பறி போய்விடுமோ..? என பயப்பட வேண்டி இருக்கிறது. ஆகையால் தான் எங்கள் பெயர்களைச் சொல்லவில்லை என்கிறார்கள் அந்த 12 முன்னாள் மற்றும் இன்னாள் ஊழியர்கள்.