டெல்லி: சமீபத்திய காலமாகவே வலைதளத்தில் இரண்டாயிரம் நோட்டுகள் தடை செய்யப்படபோவதாக பொதுமக்கள் மத்தியில் அச்சம் இருந்து வருகின்றது. இது ஜனவரி 1 முதல் அமலுக்கு வரலாம் என தகவல்கள் வெளியாகி வந்தது.
சமூக வலைதளங்களில் வெளியான இந்த தகவல்கள் வெறும் வதந்தி தான் என Press Burea of india தெரிவித்துள்ளது.
சில தினங்களாகவே சமூக வலைதளங்களில் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டு வரப்பட உள்ளதாகவும், 2000 ரூபாய் நோட்டுகள் நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியது.
காட்டுத்தீ போல பரவிய வதந்தி
கடந்த 2018 - 2019ம் ஆண்டிற்கு பிறகு புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படவில்லை என்று தகவல்கள் வெளியானது. இதனையடுத்து தான் 1000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அமலுக்கு வரலாம் என்ற தவறான தகவலானது காட்டுத் தீ போல பரவி வந்தது. இந்த தகவல் பொய்யானது, யாரும் தவறான தகவல்களை பகிர வேண்டாம் என PIB தெரிவித்துள்ளது.
PIb-க்கு அனுப்புங்கள்
அப்படி ஏதேனும் பொய்யான தகவல்கள் பரவினால், அதனை PIB-க்கு அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளது. இதற்காக https://factcheck.pib.gov.in. என்ற இணையதளத்திற்கோ அல்லது +918799711259 என்ற மொபைல் எண்ணுக்கோ அல்லது pibfactcheck@gmail.com என்ற மெயில் ஐடிக்கோ அனுப்பலாம். இது குறித்தான தகவல்களை https://pib.gov.in. என்ற தளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.
ரூ.2000 அச்சிடல் நிறுத்தம்
கடந்த 2016ல் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எடுத்தது. அதன் தாக்கம் இன்று வரையில் மக்கள் மத்தியில் இருந்து வருகின்றது எனலாம். மேற்கோண்டு சந்தேகத்தினை அதிகரிக்கும் விதமாக, கடந்த 3 வருடங்களாகவே 2000 ரூபாய் தாள்கள் அச்சிடுவது நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தரவுகள் வெளியாகியது.
இது தான் காரணமா?
இது மிக உயர்மதிப்புள்ள தாளாக இருப்பதால் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி அளிக்கவும், போதை பொருட்கள் கடத்தவும், கறுப்பு பணமாகவும் பதுக்க பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியது. இதன் காரணமாகத் தான் அரசு அச்சடிப்பதை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட நாடுகள் பலவும் இவ்வாறு உயர் மதிப்புடைய தாள்களை குறிப்பிட்ட காலத்தில் தடை செய்துள்ளன, ஆக இந்தியாவும் 2000 ரூபாயினை தடை செய்யலாம் என தகவல்கள் வெளியாகியது.