கொச்சி: கேரளாவை தலைமையிடமாக கொண்ட பெடரல் வங்கி தனது வங்கிக்கு பணியாளர்களை தேர்வு செய்ய வழக்கமான நடைமுறைகளில் இருந்து கிட்டதட்ட முழு பணிகளையும் ரோபோக்களிடம் ஒப்படைக்க உள்ளது.
இதன் மூலம் வங்கி பணிக்கு ஆட்களை தேர்வு செய்ய ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் இந்தியாவின் முதல் வங்கி என்ற பெயரை ஃபெடரல் வங்கி பெறுகிறது.
இது வரை வேலை செய்வதற்கு தான் மிஷினை கொண்டு வந்தார்கள். வேலைக்கு ஆட்களை தேர்வு செய்யவே மிஷினை கொண்டு வந்து இறக்கி உள்ளது கேரளாவின் கொச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பெடரல் வங்கி.
ரோபோ இண்டர்வியூ
பெடரல் வங்கி ஃபெட்ரெக்ரூட் என்ற மனிதவள மேம்பாட்டு கருவியை அதாங்க ரோபோ ஹெச்ஆரை இறக்கி உள்ளது. இந்த கருவிதான் பணிக்கு விண்ணப்பிப்பவர்களை பரிசீலனை செய்து நேர்காணலுக்கு அழைத்து, அவர்களிடம் உள்ள வேலைக்கான திறனை மதிப்பிட்டு, ஆளுமை திறனை அறிந்து பணியாளர்களை இறுதி செய்கிறது. இப்படி தேர்வு செய்யப்பட்டவர்கள் கடைசி ரவுண்டில் தான் உயர் மனிதவள மேம்பாட்டு அதிகாரிகளை, அதாவது மனிதர்களை சந்திக்க முடியும்.
ஏஐ தொழில் நுட்பம்
ஹெ..டி.எஃப்.சி வங்கி போன்ற பெரிய வங்கி நிறுவனங்கள், வங்கி பணிக்கு நிறைய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இந்த வங்கிகள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் விஷயத்தில் ஏஐ தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதில் ஆரம்ப நிலையில் தான் இருக்கின்றன. ஆனால் இந்தியாவில வங்கி வேலைக்கு ஆட்களை பணியமர்த்துவதற்கு ஏஐ தொழில்நுட்பத்திற்கு முழுமையாக மாறிய முதல் நிறுவனம் என்ற பெருமையை ஃபெடரல் வங்கி பெற்றுள்ளது.
அஜித் குமார் விளக்கம்
பெடரல் வங்கியின் மனித வள மேம்பாட்டு தலைவர் அஜித் குமார் இதுபற்றி கூறுகையில், 'ஃபெட்ரெக்ரூட்' மனிதவளமேம்பாட்டு கருவி, வழக்கமாக ஒருவர் வேலைக்கு விண்ணப்பித்தால் அவரின் ரெசியூம் அதாவது வேலைக்கான விண்ணப்பத்தை தாண்டி 360 டிகிரி கோணத்தில் அவரை பற்றிய விவரிப்புகளை உருவாக்குகிறது.
சைக்கோமெட்ரிக்
ரோபோடிக் நேர்காணல்கள், சைக்கோமெட்ரிக் மற்றும் விளையாட்டு அடிப்படையிலான மதிப்பீட்டு செயல்முறைகள் போன்ற பல நிலைகள் மூலம் அவரை பற்றி மதிப்பீடுகள் புள்ளிகள் அடிப்படையில் சேகரிக்கப்படுகின்றன
ஆளுமை திறன்
ரோபோ நேர்காணல் செயல்முறையில், வேலைகேட்டு வந்தவரின் ஆளுமைப் பண்புகள், குணாதிசியங்கள், உள்ளிட்டவற்றை சோதனை செய்கிறது. இதற்காக நேருக்கு நேர் நேர்காணல்களுக்கு ஒருங்கிணைந்த வீடியோக்களைப் பயன்படுத்துகிறது. அத்துடன் அப்போது பணியாளர் நடந்து கொள்ளும் விதம் குறித்த வீடியோக்களையும் சிறந்த பணியாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்கு அந்த ரோபோ பயன்படுத்துகிறது.
இறுதி வரை தொடரும்
நேர்முக தேர்வு என்பது AI- இயக்கப்பட்ட சாட்போட் திரைகளுடன் தொடங்குகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அவரிடம் உள்ள அறிவினை தெரிந்து கொள்கிறது. இறுதியாக வேலைக்கு விண்ணப்பதாரரை நியமிக்கும் முன்பான படி நிலைக்கு அவரை படிப்படியாக அழைத்து செல்கிறது அத்துடன் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நபரின் பெற்றோருக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு செய்த தகவலை அறிவிக்கிறது. அத்துடன் சாட்போட் அவர்களுக்கு வேலைக்கான ஆஃபர் கடிதத்தை அனுப்புகிறது. இத்துடன் முடிகிறது அந்த பணி.
350 பேர் தேர்வு
இந்த ஆண்டு 700 பேரை பணிக்கு எடுக்கிறோம். இதில் ஏற்கனவே அக்டோபர் முதல் 350 பேர் அதிகாரிகளை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்தியுள்ளோம், மீதமுள்ள 350 பேரும் டிசம்பர் மாதத்தில் பணியமர்த்தப்படுவார்கள். தேர்வு செய்யப்பட்ட 350 பேருக்கு ஏற்கனவே ஆஃபர் லெட்டர் அனுப்பி உள்ளோம்
தொழில்நுட்பம்
உண்மையில், நாட்டின் ஆறாவது பெரிய தனியார் துறை வங்கியான(பெடரல் வங்கி) எங்கள் வங்கி ஒரு ஆட்சேர்ப்பு கட்டமைப்பை உருவாக்குகிறது, இது கலாச்சாரம், திறமை, நிறுவன அமைப்பு மற்றும் செயல்முறைகளை தொழில்நுட்பத்தின் மூலம் ஒருங்கிணைக்கிறது.
சந்தோஷத்தில் அதிகாரி
ஆரம்ப சோதனை முயற்சி வெற்றியால் சந்தோஷம் அடைந்துள்ளோம், வங்கியின் பிற பணியமர்த்தலுக்கு பணியாளர்களை நியமிக்கவும் இந்த தொழில்நுட்பத்தை விரிவுபடுத்த முடிவு செய்துளளோம்" இவ்வாறு பெடரல் வங்கி மனிதவள மேம்பாட்டு அதிகாரி அஜித் குமார் கூறினார்.