டெல்லி: நாட்டில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் வேலை இருக்குமா? அல்லது எப்போது பறிபோகுமோ? என்ற கவலையே நீடித்து வருகிறது.
அனுதினமும் கொரோனா செய்திகளிடையே ஒன்றிரண்டு செய்திகளாவது பணி நீக்கம், ஆட்குறைப்பு, சம்பள குறைப்பு என ஊழியர்கள் சம்பந்தபட்ட பிரச்சனைகளை வெளியிட்டு வருகின்றன.
ஆனால் அதனை இன்னும் பயமுறுத்தும் விதமாக மேற்கொண்டு தொடர்ந்து பல அறிக்கைகள் வெளியாகி வருகின்றன.
வேலைக்குறைப்பு இருக்கலாம்
இதற்கிடையில் இன்று லைவ் மிண்ட் செய்தியில் வெளியான அறிக்கை ஒன்றில், ஆட்டோமேஷன், டிஜிட்டல், கிக் எனப்படும் தற்காலிக தொழில்சார் பொருளாதார கீழ் இருக்கும் ஊழியர்கள், உற்பத்தி துறையில் உள்ள ஊழியர்கள் அதிக வாய்ப்புகளை பெறுவர் என்றும் கூறியுள்ளது. எனினும் கொரோனாவால் மாறி வரும் வணிக சூழல் காரணமாக 10 -20% வரை வேலை குறைப்புகளும் இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறை? எவ்வளவு பணி நீக்கம்?
குறிப்பாக ஆட்டோமொபைல் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் 10 - 15% வேலை குறைப்புகள் இருக்கலாம். அதோடு ஜவுளி மற்றும் ஆடைகளில் 15 -20% ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படலாம். எனினும் இந்த ரணகளமான சூழலுக்கும் மத்தியிலும் 5 - 10% ஊழியர்களுக்கான வாய்ப்புகள் திறக்கப்படும் என்று இந்திய வர்த்தக மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.
திறன் உள்ள ஊழியர்களுக்கு தேவை அதிகரிக்கலாம்
2022ம் ஆண்டளவில் குறைந்தபட்சம் 50% தொழிலாளர்கள் வாகனத்துறையில் மாற்றப்பட்ட திறன் தொகுப்புகளுடனும் இருப்பர். ஜவுளி துறையில் மற்றும் ஆடைகளில் 40% வரையில் மாற்றப்பட்ட திறன் தொகுப்புகளுடனும் இருப்பார்கள் என்று நாஸ்காம் தெரிவித்துள்ளது. மேலும், கொரோனாவிற்கு பின்பு புதிய திறன் உள்ள ஊழியர்களுக்கு அதிக தேவை இருக்கலாம் என்றும் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய வாய்ப்புகள் குறைவு
இது இப்படி எனில், மறுபுறம், புதிய வேலை வாய்ப்புகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 6.73% குறைந்துள்ளதாக மற்றொரு அறிக்கை கூறியுள்ளது. எனினும் ஐடி துறை ஊழியர்கள் மற்றும், இன்ஜினியர்கள், விற்பனை, செயல்பாடு மற்றும் மேலாண்மை வல்லுனர்கள், மனிதவள நிர்வாக ஊழியர்கள் உள்ளிட்ட சில இந்த காலகட்டத்தில் தேவைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
புதிய பணியமர்த்தல்
நிலவி வரும் நிச்சயமற்ற சூழலில் நிறுவனங்கள் பணி நீக்கம் செய்யவோ அல்லது சம்பளத்தினை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்து வருகின்றன. அதோடு பல நிறுவனங்களில் புதிய பணியமர்த்தலையும் தள்ளி வைத்து வருகின்றன. ஆக இந்த நிச்சயமற்ற சூழலை நிர்வகிப்பதற்காக புதிய திறன் கொண்ட ஊழியர்கள் தேவைப்படுகின்றனர். எனினும் விரைவில் இயல்பான நிலை திரும்பும் என்றும் SCIKEY தெரிவித்துள்ளது.