இந்தியாவில், பொதுவாக வங்கி வாடிக்கையாளர்கள் வாங்கி இருக்கும் கடனுக்கு, செலுத்த வேண்டிய இ எம் ஐ தவணைகளை, ஒத்திவைக்க, கடந்த மார்ச் 2020-ல் இருந்து அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இ எம் ஐ ஒத்திவைப்பு கால அவகாசம் ஆகஸ்ட் 31, 2020 உடன் ஒரு முடிவுக்கு வருகிறது.
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனையால், விருந்தோம்பல் துறை என்று சொல்லப்படும் உணவகங்கள், ஹோட்டல்கள் எல்லாம் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றன.
இ எம் ஐ ஒத்திவைப்பு நீட்டிப்பு
இந்த ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள், வங்கிகளில் வாங்கி இருக்கும் கடன்களுக்கான இ எம் ஐ தவணைகளை ஒத்திவைக்க வேண்டிய தேவை இருக்கிறது. அல்லது விருந்தோம்பல் துறையினர்கள் வாங்கி இருக்கும் கடன்களை மறு சீரமைக்க (Loan Restructuring) வேண்டிய தேவை இருப்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.
ஆர்பிஐ உடன் பேச்சு
விருந்தோம்பல் துறையில் வியாபாரம் செய்பவர்களின் கடன்களுக்கான தவணை ஒத்திவைப்பு, கடன் மறு சீரமைப்பு தொடர்பாக, நிதி அமைச்சகம், மத்திய ரிசர்வ் வங்கி உடன் பேசிக் கொண்டு இருப்பதாக, ஒரு ஃபிக்கி அமைப்பு கூட்டத்தில், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசி இருக்கிறார்.
ஹோட்டல் துறை கோரிக்கை
இந்த கொரோனா பிரச்சனையால், சுமாராக 90 சதவிகிதம் வியாபாரம் அடி வாங்கி இருக்கிறது. இந்தியாவில் விருந்தோம்பல் துறை சார்ந்து சுமாராக 4.5 கோடி மக்கள் வேலை பார்த்து வருகிறார்கள். எனவே வங்கிக் கடன்களில் ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள் Hotel Association of India (HAI) அமைப்பினர்.
வங்கிகள் தரப்பு
ஆனால் வங்கிகளோ, இதற்கு மேலும் கடன் தவணைகளை ஒத்திவைக்கும் (EMI Moratorium) நடவடிக்கையை நீட்டிக்கக் கூடாது என தங்கள் தரப்பில் இருந்து சொல்லி இருக்கிறார்கள். சமீபத்தில் ஹெச் டி எஃப் சியின் தலைவர் தீபக் பரேக், இ எம் ஐ தவணைகளை ஒத்தி வைக்கக் கூடாது என, ஆர்பிஐ ஆளுநர் சக்தி காந்த தாஸுக்குச் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது.