டெல்லி: இந்த 2020 - 21 நிதி ஆண்டில், வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கி இருக்கிறது மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருமான வரித் துறை.
இந்த முயற்சியில், வரி ஏய்ப்பு செய்ய சாதகமாக, சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை எல்லாம், ஒவ்வொன்றாக கண்டு பிடித்து சரி செய்யும் வேலையிலும், வருமான வரித் துறையினர் மற்றும் நிதி அமைச்சக அதிகாரிகல் அதிரடியாக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். இது தொடர்பாக விஷயம் தெரிந்த ஒரு அதிகாரியே இதை உறுதி செய்து இருக்கிறார்.
இதுவரை மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும், நேரடி வரித் துறை, மறைமுக வரித் துறை, புதிதாக அமல்படுத்தப்பட்டு இருக்கும் சரக்கு மற்றும் சேவை வரிகள் வழியாக டிபி (Terra Byte) கணக்கில் தரவுகளைச் சேகரித்து வைத்து இருக்கிறார்களாம்.
இந்த தரவுகளை எல்லாம் எவ்வளவு பயன்படுத்த முடியுமோ, அவ்வளவு பயன்படுத்தி, வரி சார்ந்த சட்டங்களில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்களாம். அதோடு ஏதாவது வரி ஏய்ப்பு செய்து இருக்கிறார்களா..? எனவும் பார்க்கிறார்களாம்.
இந்த வேலைகளை எல்லாம் மிகப் பெரிய நிறுவனங்களிடம் இருந்து தொடங்கவில்லை. அதற்கு நேர் மாறாக சிறு மற்றும் குறு வியாபாரிகள், தனி நபர் வியாபாரிகள், கூட்டாளி வியாபார நிறுமங்கள் என சின்ன சின்ன வியாபாரிகளிடம் இருந்து தொடங்கி இருக்கிறார்களாம்.
பிசினஸ் ஸ்டாண்டர்ட் பத்திரிகையில், கடந்த வெள்ளிக்கிழமை வெளியான செய்தியில், ஏற்கனவே சம்பளதாரர்களுக்கும் வரிச் சலுகைகளைக் கொடுத்து இருப்பது மற்றும், அரசுக்கு வரி வருவாய் குறைந்து இருப்பது போன்ற காரணங்களால், தற்போது மத்திய அரசு Presumptive taxation scheme-களை நெருக்கத் தொடங்கி இருக்கிறார்கள் எனச் சொல்லி இருந்தது.
ஏற்கனவே இந்தியாவில் வரி செலுத்துபவர்கள் மற்றும் வருமான வரி தாக்கல் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. 130 கோடி பேர் வாழும் இந்திய நாட்டில் கடந்த 2017 - 18 நிதி ஆண்டில் சுமாராக 8.4 கோடி பேர் மட்டுமே வருமான வரி தாக்கல் செய்து இருக்கிறார்கள். அதிலும் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சிறு குறு வியாபாரிகளையும், அவர்கள் வியாபாரத்தையும் பாதிக்காத வகையில் வருமான வரித் துறை செயல்பட்டால் சந்தோஷம் தான்.