டெல்லி: வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கான பணத்திற்கு செய்யப்படும், இன்சூரன்ஸ் தொகை விரைவில் உயர்த்தப்பட உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மேலும் இது தொடர்பான சட்டத்திருத்தங்களும் எதிர்வரும் நாடாளுமன்ற தொடரில் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
பி.எம்.சி வங்கியில் நிகழ்ந்த மோசடிகள் காரணமாக வாடிக்கையாளர்கள் நம்பிக்கையை இழந்துள்ள நிலையில், இந்த இன்சூரன்ஸ் தொகை அதிகரிப்பு வாடிக்கையாளர்கள் மனதில் நம்பிக்கையை கொண்டு வரலாம் என்றும் கருதப்படுகிறது.
புதிய மசோதா
தற்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்படும் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான தொகைக்கு மட்டும் இன்சூரன்ஸ் வசதி உள்ளது. இந்த நிலையிலேயே வங்கி டெபாசிட்களுக்கான 1 லட்சம் இன்சூரன்ஸ் தொகையை அதிகரிக்க புதிய சட்ட மசோதா கொண்டு வரப்பட இருப்பதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
உத்தரவாதம் கிடைக்கும்
வங்கி டெபாசிட்கள் அனைத்தும் டெபாசிட் இன்சூரன்ஸ் மற்றும் கடன் உத்தரவாத நிறுவனத்தின் காப்பீட்டில் உள்ளன. இதன் படி, ஒரு வங்கி திவாலாகும் பட்சத்தில் அதில் வாடிக்கையாளர் எவ்வளவு பணத்தை டெபாசிட் செய்திருந்தாலும், அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் மட்டுமே கிடைக்கும். ஆனால் இந்த திருத்தத்தின் மூலம் 5 லட்சம் ரூபாய் வரை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
ரூ.25 லட்சம் வரை கிடைக்கலாம்
இந்த நிலையில் 1992ம் ஆண்டு பத்திர மோசடியில் ஈடுபட்ட பேங்க் ஆப் கராட் சரிந்த பின்னரே, 1993ம், ஆண்டு இப்படி ஒரு இன்சூரன்ஸ் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்த நிலையில் மத்திய அரசின் இந்த திட்டத்தால் மொத்த வைப்பு தொகையாளர்களுக்கு 25 லட்சம் ரூபாய் வரை காப்பீடு கிடைக்கும் என்றும் பிசினஸ் ஸ்டேண்டர்டு தெரிவித்துள்ளது.
இன்னும் சில திட்டங்கள் கொண்டு வரப்படலாம்
இந்த நிலையில் ஒடிசாவின் தலை நகர் புவனேஸ்வரில் டிசம்பர் 13ம் தேதி நடைபெறும், இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய வாரியக் கூட்டத்தில் இது சம்பந்தமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இது தவிர இன்னும் சில திட்டங்களை கவனத்தில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக கூடுதல் பிரீமியம் மூலம் கூடுதல் காப்பீட்டை பெற வங்கிகள் அனுமதிப்பது உள்ளிட்ட பிரச்சனைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படலாம்.
பி.எம்.சி வங்கி மோசடியின் எதிரொலி
அண்மையில் பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் ஊழல் நடந்ததைத் தொடர்ந்து, தொடர்ச்சியான வங்கிகளில் ஏற்படும் இது, வங்கி வாடிக்கையாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இப்படி ஒரு நடவடிக்கை எடுக்க திட்டமிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. எது எப்படியோ மக்கள் இதனால் பயனடைந்தால் சரியே.