டெல்லி: நாட்டில் நிலவி வரும் நெருக்கடிக்கு மத்தியில் நிதியமைச்சகம் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவிடம், மக்கள் வருவாய் இன்றி தவித்து வரும் நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் நிதி சலுகையை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா முழுமையும் 21 நாட்கள் முழுமையாக லாக்டவுன் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வேலைக்கு செல்ல முடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை நிலவி வருகின்றது.
இதனால் மக்கள் தாங்கள் மாதம் செலுத்தும் இஎம்ஐ, குறிப்பாக வீட்டுக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு பில், பர்சனல் லோன், வணிகக் கடன் என பலவற்றையும் திரும்ப செலுத்த இயலாத நிலையில் இருந்து வருகின்றனர்.
நிலவி வரும் மோசமான நிலை
உலகம் முழுக்க அச்சுறுத்தி வரும் கொரோனாவினால் மக்கள் உலகம் முழுக்க வீடுகளுக்குள் இருக்க கட்டாயப்படுத்தும் நிலையில், உலகம் முழுக்க உள்ள மக்கள் அவர்களின் தொழில், தொழிற்சாலைகள், நிறுவனங்கள், சப்ளை செயின்கள், ஏற்றுமதி இறக்குமதி, உற்பத்தி என அனைத்தும் முடங்கியுள்ளன. இதனால் அவர்கள் முழுமைக்கும் தங்களது அத்தியாவசிய தேவையை கூட பூர்த்தி செய்ய இயலாத நிலை நிலவி வருகிறது.
சம்பளம் இல்லை
ஒரு புறம் நிறுவனங்கள் முடங்கி கிடக்கும் நிலையில், தங்களுக்கு வர வேண்டிய சம்பளங்கள் திடீரென்று நின்று விடும் அபாயம் உள்ளதால், அதனை நம்பி கடனை கட்ட வேண்டிய அபாயம் உள்ளது. இன்னும் கூட சொல்லப்போனால் பல ஆயிரம் பேர் தங்களது வேலைவாய்ப்பினை இழந்துள்ளனர். இப்படி இருக்கையில் இதனை நம்பி பல கமிட்மென்டுகள் வைத்திருப்பர்.
ஆர்பிஐக்கு பரிந்துரை
இதனால் மக்கள் தங்களது கடனினை செலுத்த முடியாத நிலை நிலவி வருகிறது. நிதித் சேவைத்துறை செயலாளர் டெபாஷிஸ் பாண்டா கடந்த செவ்வாய்கிழமையன்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. அதில் மக்கள் செலுத்த வேண்டிய இஎம்ஐ செலுத்துதல், வட்டி மற்றும் கடனை திருப்பிச் செலுத்துதல், மேலும் இவற்றை வாராக்கடனாக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் பரிந்துரை செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எதற்காக இந்த கடிதம்?
கொரோனா வைரஸ் வெடிப்பினால் ஏற்படும் வருமான இழப்பை தனி நபர்களும் வணிகங்களும் எதிர்கொள்வதால், நிவாரண நடவடிக்கைகளின் அவசியத்தை இந்த கடிதம் எடுத்துக் காட்டியுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. வணிகம் மற்றும் தனி நபர்களின் முடக்கத்தினை அடுத்து கடன்களை திரும்ப செலுத்த முடியாது என்ற நிலையில், வங்கிகள் அவரது கடன் மதிப்பீட்டில் எந்த வித பிரச்சனையையும் ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
விரைவில் அறிவிப்பு வரலாம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனாவால் ஏற்படும் பொருளாதார தாக்கத்தினை எதிர்கொள்ள அரசாங்கம் ஒரு தொகுப்பை உருவாக்கி வருவதாகவும், அது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் பிரதமர் வட்டாரங்களில் உள்ள அதிகாரிகள் இன்னும் மூன்று நாட்களில் இதற்கான ஒரு அறிவிப்பு வரலாம் என்றும் கூறியுள்ளனர்.
மக்களுக்கு ஆதரவு
மேலும் செலுத்த வேண்டிய இஎம்ஐ மற்றும் கிரெடிட் கார்டு பேமென்டுகள், வாராக்கடன் குறித்த அறிக்கைகள் விரைவில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர பல பிரச்சனைகள் பற்றி ஆர்பிஐ-யிடம் பேசி வருவதாகவும், எப்படி எனினும் நிச்சயம் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் இருப்போம் என்றும் நிதியமைச்சர் கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications