இந்தியாவின் முன்னணி விமான நிறுவனங்களில் ஒன்று இண்டிகோ என்பதும் இந்நிறுவனம் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு அவ்வப்போது பல்வேறு புதிய வசதிகளை செய்து தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த நிறுவனம் இதுவரை குறுகிய வடிவ விமானங்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் முதல் முறையாக அகன்ற வடிவ விமானங்களை பயணிகளுக்காக இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அகன்ற வடிவ விமானங்களை வெளிநாட்டிலிருந்து குத்தகைக்கு எடுக்க இண்டிகோ திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இண்டிகோ விமான நிறுவனம்
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனங்களில் ஒன்றான இண்டிகோ முதல் முறையாக அகன்ற விமானங்களை இயக்க இருப்பதாக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது
குத்தகை
சர்வதேச நிறுவனங்களிடம் இருந்து அகன்ற விமானங்களை குத்தகைக்கு எடுக்க இண்டிகோ நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் அதில் எக்னாமிக் மற்றும் பிசினஸ் வகுப்புகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் விமானங்களை குத்தகைக்கு எடுப்பது மட்டுமின்றி அதன் பணியாளர்களையும் குத்தகைக்கு எடுக்க இருப்பதாக கூறப்படுகிறது
அதிக தூரம்
குறுகிய விமானங்களை விட அகன்ற வடிவ விமானங்களில் அதிக எரிபொருளை நிரப்ப முடியும் என்பதால் அதிக தூரம் பறக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் எந்த மாதிரியான அகன்ற வடிவ விமானத்தை இண்டிகோ குத்தகைக்கு எடுக்க உள்ளது என்பது குறித்த தகவல் இன்னும் உறுதிசெய்யப்படவில்லை
பிசினஸ் வகுப்புகள்
இதுகுறித்து இண்டிகோ செய்தி தொடர்பாளர் கூறியபோது, 'உலகளவில் விமானப் போக்குவரத்துத் துறை பல்வேறு இடையூறுகளை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில் எங்கள் செயல்பாடுகளை சீராக தொடரவும், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலையில் பயணத்தை வழங்கவும் பல தீர்வுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். குறுகிய விமானங்களைக் கொண்ட விமானத்தில் எகானமி வகுப்புகள் மட்டுமே உள்ளன. எனவே பிசினஸ் வகுப்புடன் கூடிய அகன்ற விமானங்களையும் இயக்க முடிவு செய்துள்ளோம்' என்று தெரிவித்தார்.
இடைக்கால நடவடிக்கை
முதல்கட்டமாக இடைக்கால நடவடிக்கையாக, சர்வதேச விமான நிறுவனங்களிடம் இருந்து சில விமானங்களை குத்தகைக்கு எடுக்க முடிவு செய்துள்ளோம். அதற்கான ஒப்புதலையும் பெற்றுள்ளோம். இதன் மூலம் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சொகுசான அதே நேரத்தில் குறைந்த கட்டணத்துடன் கூடிய விமான பயணத்தை வழங்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்' என்றும் தெரிவித்தார்.
மும்பை-இஸ்தான்புல்
வரும் 2023ஆம் ஆண்டு ஜனவரி முதல் மும்பை-இஸ்தான்புல் வழித்தடத்தில் அகன்ற விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.