தென் ஆப்பிரிக்கா நாட்டின் 2வது மிகப்பெரிய வங்கியாக இருக்கும் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி சுமார் 118 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தற்போது இந்திய வர்த்தகச் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் கடந்த 12 வருடங்களாக இயங்கி வரும் ஃபர்ஸ்ட்ரேண்ட், தனது வங்கி மற்றும் நிதியியல் சேவைகளை நாடு முழுவதும் விரிவாக்கம் செய்ய வேண்டும் எனப் பல ஆண்டுகளா முயற்சி செய்து வருகிறது. ஆனால் இதில் எவ்விதமான முன்னேற்றமும் அடையாத காரணத்தால் இந்தியச் சந்தையை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளது.
ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி
தென் ஆப்பிரிக்காவின் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கிக்கு இந்தியாவில் மும்பை நகரில் மட்டுமே அலுவலகம் இருக்கும் நிலையில், இந்த அலுவலகத்தை முழுமையாக மூடாமல் limited representative அலுவலகமாக மாற்ற முடிவு செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர்.
இறுதிக்கட்ட ஆலோசனை
இந்தியாவில் இவ்வங்கியின் நிர்வாக மாற்றம் குறித்து ஃப்ரஸ்ட்ரேண்ட் வங்கி நிர்வாகம் இறுதிக்கட்ட ஆலோசனையில் இருக்கும் இதேவேளையில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையத்திடம் ஆலோசனை செய்யும் பணிகளையும் துவங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
சிட்டி குரூப் வெளியேறியது
அமெரிக்காவின் முன்னணி வங்கிகளில் ஒன்றான சிட்டி குரூப் சில நாட்களுக்கு முன்பு இந்தியா உட்பட 13 நாடுகளில் இருந்து ரீடைல் மற்றும் நகர்வோர் வங்கி சேவையில் இருந்து வெளியேறிய முழுமையாக வெளியேறிய நிலையில், தற்போது 2வது வெளிநாட்டு வங்கி வெளியேறுகிறது.
இந்தியாவில் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி
ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி இந்தியாவில் தனது வர்த்தகக் கிளையை 2009ஆம் ஆண்டுத் துவங்கினாலும் 2012ஆம் ஆண்டுத் தான் வாடிக்கையாளர்களுக்கும், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்குக் கடன் அளிக்கத் துவங்கியது. இதன் பின்பு இந்தியா முழுவதும் வர்த்தகக் கிளைகளைத் துவங்கி வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு இருந்த நிலையில் முயற்சிகள் தோல்வி அடைந்தது.
3 வெளிநாட்டு வங்கிகள்
இந்தியாவில் முழுமையான வர்த்தகப் பிரிவை துவங்கிய 3 வெளிநாட்டு வங்கிகளில் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கியும் ஒன்று, சிங்கப்பூர் டிபிஎஸ் வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் மொரூஷியஸ் ஆகியவை மற்ற இரு வங்கிகளாகும்.
ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி நிதிநிலை
மேலும் IL&FS கடன் மோசடியில் ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கிக்கு சுமார் 35 கோடி ரூபாய் அளவிலான கடன் உள்ளது. மார்ச் 2020 முடிவில் 420 கோடி ரூபாய் வர்த்தகத்தைக் கொண்டுள்ள ஃபர்ஸ்ட்ரேண்ட் வங்கி வெறும் 5.37 கோடி ரூபாய் அளவிலான லாபத்தை மட்டுமே பெற்றுள்ளது. மேலும் இவ்வங்கியின் வாராக்கடன் அளவு மார்ச் 2019ல் 5.18 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.