சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான பிட்ச் சொல்யூசன்ஸ் நிறுவனம், நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இந்திய ரூபாயின் சராசரி மதிப்பினை மாற்றியமைத்துள்ளது.
சரி பிட்ச் எதற்காக இப்படி மாற்றியமைத்துள்ளது? அதற்கு என்ன காரணம்? எவ்வளவு? அது இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வாருங்கள் பார்க்கலாம்.
நடப்பு 2020ம் ஆண்டில் இந்தியாவின் ரூபாயின் சாராசரி மதிப்பு 77 ரூபாயாகவும், இதே 2021ல் சராசரி விகிதம் 80 ரூபாயாக இருக்கும் என்றும் மதிப்பிட்டுள்ளது.
வீழ்ச்சி காணும்
இது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் 2020- 21 நிதியாண்டில் உண்மையான வளர்ச்சி விகிதம் 5.4% இருக்கும் என்றும், இதே அடுத்த நிதியாண்டில் 5.8% ஆகவும் இருக்கும் என்றும் கணித்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்கா டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நீண்ட காலத்திற்கு வீழ்ச்சியில் தான் இருக்கும் என்று பிட்ச் சொல்யூசன்ஸ் கணித்துள்ளது.
எண்ணெய் விலையால் சற்று கட்டுபடலாம்
நாட்டில் நிலவி வரும் உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியில் மக்களின் உணர்வு எதிர்மறையாகத் தான் உள்ளன. இது ரூபாய் வீழ்ச்சிக்கு மேலும் வழி வகுக்கின்றன. இருப்பினும் வீழ்ச்சி கண்டு வரும் எண்ணெய் விலையால், வர்த்தக பற்றாக்குறை சற்று குறையும் என்பதால், இது ரூபாயின் அதிக வீழ்ச்சியை சற்று தடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
ரூபாயின் மதிப்பு கணிப்பு
மேலும் உலகளாவிய பொருளாதாரமும் வீழ்ச்சி கண்டு வரும் நிலையில் அதன் அழுத்தம் இந்திய ரூபாயிலும் எதிரொலிக்கக் கூடும். சொல்லப்போனால் 2020ல் சராசரி ரூபாயின் மதிப்பு 77 ரூபாயாகவும், இதே 2020ல் சராசரி மதிப்பு 80 ரூபாயாகவும் மாற்றியமைத்துள்ளது. இது முன்னர் முறையே 73 ரூபாய் மற்றும் 75 ரூபாயாக இருக்கும் என்றும் கணித்திருந்தது.
இவ்வளவு வீழ்ச்சியா?
இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் கடந்த ஜனவரியில் இருந்து ரூபாயின் மதிப்பு 7% வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் இதுவரை அமெரிக்கா டாலருக்கு எதிரான ரூபாயின் சராசரி மதிப்பு 72.10 ரூபாயாகவும் உள்ளது. ஆரம்ப காலத்தில் யெஸ் பேங்கினை ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த நிலையில் ரூபாய் மதிப்பு சரிய ஆரம்பித்தது. ஏனெனில் அது வங்கித் துறையின் ஸ்திரத்தன்மையை மாற்றியமைப்பதாகவும், இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை உருவாக்கியது என்றும் கூறலாம்.
இதுவும் ஒரு காரணம்
இதனை தொடர்ந்து உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்று விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. இதனால் உலகளாவிய பங்கு சந்தைகளும் படு வீழ்ச்சி கண்டு வந்தன. இன்னும் சொல்லப்போனால் உலகளாவிய சொத்துகளில் இருந்து தங்களது முதலீடுகளை முதலீட்டாளர்கள் வெளியே எடுத்து வருகின்றனர். இது அந்தந்த நாட்டு கரன்சிகள் மேலும் வீழ்ச்சி காண வழிவகுத்தன.
இன்னும் வீழ்ச்சியடையலாம்
இப்படி ஒரு நிலையில் இந்திய ரூபாய் இரண்டு பெரிய அபாயங்களைக் எதிர்கொண்டு வருகிறது. ஒன்று நடப்பு கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறது. ஆக இப்படி வளர்ந்து வரும் ஒரு சந்தை நாணயமாக இருக்கும் ரூபாய் ஏற்கனவே பல பிரச்சனைகளை சந்தித்து வரும் நிலையில், அபாயகரமான காலங்களில் மேலும் வீழ்ச்சி காண வழிவகுக்கும்.
மந்தநிலையை உருவாக்கலாம்
உலகளாவிய அளவில் வளர்ச்சி காணும் பகுதிகள் பெரும்பாலும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ளன. இதனால் உலக பொருளாதாரத்தில் சுமார் 65% பூட்டுதல் அல்லது தனிமைப்படுத்துதலின் கீழ் அழுத்தத்தினை காணக் கூடும் என்றும் கூறப்படுகிறது. இது மார்ச் மாத முடிவில் நிச்சயம் உலகளாவிய மந்த நிலையை ஏற்படுத்தக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் தற்போதுள்ள நிலையில் கொரோனாவின் தாக்கம் இன்னும் அதிகரிக்க கூடும் என்ற நிலையில், ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி காணக்கூடும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் பிட்ச் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் ஆரம்பம்
ஐரோப்பிய மற்றும் தென்கிழக்கு ஆசியாவோடு ஒப்பிடும்போது இந்தியாவில் தற்போது தான் கொரோனாவின் தாக்கம் ஆரம்பமாகியுள்ள நிலையில், அதன் பரவலானது வரவிருக்கும் மாதங்களில் இன்னும் அதிகரிக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்தியா அதிகளவிலான பொருளாதார தாக்கத்தினையும் எதிர்கொள்ளக் கூடும். இதனால் ரூபாயின் மதிப்பும் மேலும் அழுத்தம் காணக்கூடும்.
மோசமான தாக்கம்
இவ்வாறு மோசமான பொருளாதார தாக்கம், முதலீட்டாளர்களின் மனதில் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தக்கூடும். இதனால் இந்தியாவுக்கு வரவேண்டிய முதலீடுகள் குறையலாம். எப்படி எனினும் இந்தியா தனக்கு தேவையான எண்ணெயில், 80% இறக்குமதி செய்வதால் எண்ணெய் விலை குறைவாக உள்ள இந்த நிலையில் அது ரூபாயின் மதிப்பு சப்போர்ட் செய்யலாம்.
எண்ணெய் விலை கணிப்பு
ரூபாயின் சராசரி மதிப்பினை குறைத்துள்ள அதே நேரத்தில் தற்போது எண்ணெய் விலையின் சராசரியினையும் குறைத்துள்ளது பிட்ச் சொல்யூசன்ஸ். இது 2020ல் பேரலுக்கு 43.20 டாலராக இருக்கும் என்று மாற்றியமைத்துள்ளது. இது முன்பு 62 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது ரூபாயின் மதிப்புக்கு சற்று ஆதரவளிக்கலாம் என்று கூறப்படுகிறது.
அதிகரிக்கும் பணவீக்கம்
இதே பணவீக்க விகிதத்தின் சராசரி 3.1% ஆக இருக்கும் என்றும் மதிப்பிட்டிருந்தது. இந்தியாவினை பொறுத்த வரையில் உணவு மற்றும் எரிபொருள் விலை பணவீக்கத்தில் அதிகமாக எதிரொலித்து வருகிறது. வளரும் பருவத்தில் பாதகமான வானிலை மற்றும் மோசமான பயிர் விளைச்சல் இன்னும் பணவீக்கத்தினை மோசமாக்க கூடும்.
இன்றைய மதிப்பு
சரி இந்திய ரூபாய் தான் இப்படி வீழ்ச்சி கண்டு வருகிறது. மற்ற நாட்டு கரன்சிகள் எப்படி உள்ளன.
1 யூரோ - ரூ.82.42
1 சவுதி ரியால் - 20.24 ரூபாய்
1 சிங்கப்பூர் டாலர் - 52.85 ரூபாய்
1 யுவான் - 10.71
1 ஆஸ்திரேலியா டாலர்- 46.11 ரூபாய்
1 பிரிட்டீஸ் பவுண்டு - 90.57 ரூபாய்