தற்போது இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
கையில் பணம் இல்லாமல் செலவு செய்துவிட்டு ஒரு மாதம் கழித்து எந்தவிதமான கட்டணமும் இல்லாமல் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்கும் வசதி தான் கிரெடிட் கார்டு என்பதால் இதனை அதிக நபர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் அதே நேரத்தில் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் ஒரு சில கட்டணங்கள் உள்ளன என்பதும் அந்த கட்டணங்களை கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளவேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
1. வருடாந்திர கட்டணம்
ஒருசில வங்கிகள் கிரெடிட் கார்டுகளை வழங்கும்போது ஒரு வருடத்திற்கு மட்டும் வருடாந்திர கட்டணம் இன்றி வழங்குகின்றன. ஆனால் ஒரு வருடம் முடிந்த பின்னர் கிரெடிட் கார்டின் வகை மற்றும் கடன் வரம்புக்கு ஏற்ப வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஒவ்வொரு வங்கியும் ஒவ்வொரு விதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. பொதுவாக இந்த கட்டணங்கள் ரூ.500 முதல் ரூ.3000 வரை இருக்கும் என்பதும் அரிதாக ஒருசில சில வங்கிகள் மட்டும் வருடாந்திர கட்டணம் வசூலிப்பதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
2. தாமத கட்டணம்
கிரெடிட் கார்டுகளில் நாம் பயன்படுத்திய தொகையை சரியான தேதியில் கட்டாவிட்டால் அனைத்து வங்கிகளும் தாமதமான கட்டணங்களை வசூலிக்கின்றன. இது சில சமயம் பெரும் தொகையாக இருக்கும் என்பதால் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோருக்கு பெரும் சுமையாக இருக்கும். எனவே நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடனை சரியான நேரத்தில் திருப்பி செலுத்தி தாமத கட்டணங்களை தவிர்க்க வேண்டும்.
3. பணம் எடுக்க கட்டணம்
கிரெடிட் கார்டு மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் வசதியை கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் வழங்கியுள்ளன. ஆனால் நீங்கள் கிரெடிட் கார்டில் இருந்து பணத்தை எடுத்தால், பணம் எடுத்த நாள் முதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதை ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும். கூடியவரையில் கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.
4. வெளிநாட்டு பரிவர்த்தனை கட்டணம்
தற்போது கிட்டத்தட்ட அனைத்து வங்கிகளும் கிரெடிட் கார்டுகளை வெளிநாட்டிலும் பயன்படுத்தலாம் என்ற வசதியை அளித்துள்ளது. நீங்கள் வெளிநாட்டில் கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது, உள்நாட்டில் பயன்படுத்துவது போல கட்டணமின்றி பயன்படுத்த முடியாது. வெளிநாட்டில் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தினால் அதற்கென தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
5. ரயில் டிக்கெட்
ரயில் டிக்கெட் வாங்கும்போது அல்லது பெட்ரோல், டீசல் வாங்கும்போது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால், குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். இது ஒரு சிறிய தொகை தான் என்றாலும் அடிக்கடி இதற்காக பயன்படுத்தினால் அதுவே ஒரு பெரிய தொகையாக மாறிவிடும்.