இந்தியாவின் 12 பொதுத்துறை வங்கிகளில் 5 பொதுத்துறை வங்கிகளின் பங்கு மதிப்பானது, அதன் முக மதிப்புக்கு அருகில் உள்ளது.
சரி என்ன காரணம்? இந்த ஐந்து பங்குகளும் இப்படி முக மதிப்பு அருகில் உள்ளனவே? லிஸ்டில் எந்தெந்த வங்கிக் பங்குகள் உள்ளன, வாருங்கள் பார்க்கலாம்.
இந்த பட்டியலில் யூகோ வங்கி, பேங்க் ஆஃப் மஹராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகள் உள்ளன.
முக மதிப்பு என்றால் என்ன?
அதெல்லாம் சரி முதலில் முக மதிப்பு (Face value) என்றால் என்ன? பங்கு சந்தையில் உங்களுக்கு அனுபவம் இருந்திருந்தால், நிச்சயம் நீங்கள் இதனை பற்றி தெரிந்திருக்கலாம். ஒரு நிறுவனம் தனது மொத்த மதிப்பினை ஒரு அடிப்படை மதிப்பினை வைத்து பங்குகளாக பிரிக்கலாம். இந்த அடிப்படை மதிப்பு தான் முக மதிப்பு என்று கூறுவார்கள்.
எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1 கோடி ரூபாய் என வைத்துக் கொள்வோம். அதன் முக மதிப்பு 10 ரூபாய் என பிரித்தால், அந்த நிறுவனம் 10,00,000 பங்குகளை வைத்துள்ளதாக தெரிந்து கொள்ளலாம். மேற்கணக்கிடப்பட்ட 10 ரூபாய் என்பது தான் ஒரு நிறுவனத்தின் முக மதிப்பாக கணக்கிடப்படுகின்றது.
எவ்வளவு முக மதிப்பாக வைக்கலாம்?
சரி இந்த முக மதிப்பால் நிறுவனத்திற்கு என்ன லாபம் நஷ்டம்? முதலீட்டாளர்களுக்கு என்ன லாபம்? ஒரு நிறுவனம் தங்களுக்கு ஏதுவான, வசதிற்கேற்ப ஒரு மதிப்பினை முக மதிப்பினை நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆனால் பெரும்பாலும் நிறுவனங்கள் முகமதிப்புகளை அதிகம் வைத்துக் கொள்ள விரும்புவதில்லை.
சாதகம் என்ன & பாதகம் என்ன?
ஏனெனில் ஒரு நிறுவனத்தின் பங்கினை நீங்கள் 100 ரூபாய்க்கு வாங்கி வைத்துள்ளீர்கள் என வைத்துக் கொள்வோம். அதன் முகமதிப்பு 10 ரூபாய் என வைத்துக் கொள்வோம். அந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பானது ஏதோ ஒரு காரணத்தினால் 10 ரூபாய்க்கு கீழாக குறைந்து விடுகிறது. அல்லது நிறுவனம் டி-லிஸ்ட் செய்வதாக அறிவிக்கிறது எனில், நிறுவனம் ஒரு பங்கிற்கு குறைந்தபட்சம் முக மதிப்பினை முதலீட்டாளர்களுக்கு வழங்கியாக வேண்டும்.
நிறுவனத்திற்கு இப்படி ஒரு செக்
ஒரு வேளை நிறுவனம் நஷ்டத்தில் பங்கு 1 ரூபாய்கு சென்றாலும் கூட, முதலீட்டாளர்களுக்கு 10 ரூபாய் வழங்க வேண்டும். அதனால் தான் நிறுவனங்கள் பெரும்பாலும் 1 ரூபாய் முக மதிப்பாக வைத்துள்ளன. ஒரு வேளை நஷ்டமே கண்டாலும், கடினமான நேரங்களில் குறைவான நஷ்ட ஈட்டை கொடுக்கலாம்.
பொதுத்துறை வங்கிகளின் முகமதிப்பு
அப்படி பார்க்கையில், யூகோ வங்கி, பேங்க் ஆஃப் மஹராஷ்டிரா, பஞ்சாப் & சிந்த் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் ஒவர்சீஸ் வங்கி உள்ளிட்ட வங்கிகளின் முகமதிப்பானது 10 ரூபாய். ஆனால் இந்த வங்கி பங்குகளின் மதிப்பும், முகமதிப்பும் கிட்டதட்ட ஒரே அளவில் இருப்பது தான் இங்கு கவனிக்கதக்க விஷயமே.
பொதுத்துறை வங்கிகளின் பங்கு விலை எவ்வளவு?
கடந்த வெள்ளிக்கிழமையன்று யூகோ வங்கியின் பங்கு விலையானது 12.45 ரூபாயாகும். இதே இந்திய ஓவர்சீஸ் வங்கியின் பங்கு விலையானது முக மதிப்புக்கு கீழாக சென்று 9.27 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதே பேங்க் ஆஃப் மஹாராஷ்டிராவின் பங்கு விலையானது 11.29 ரூபாயாகும். இதே சென்ட் ரல் பேங்க் ஆஃப் இந்தியாவின் பங்கு விலையானது 12.45 ரூபாயாகவும், இதே பஞ்சாப் & சிந்த் வங்கியின் பங்கு விலையானது 10.82 ரூபாயாகவும் உள்ளது.
ஆர்வமின்மையே காரணம்
இதற்கு முக்கியமான காரணம், இந்த பங்குகளில் முதலீட்டாளர்களின் ஆர்வமின்மையே என்கிறார்கள் நிபுணர்கள். இது குறித்து லைவ் மிண்டில் அறிக்கையில், கடந்த சில மாதங்களாக சந்தையில் சற்று மீள்ச்சியை கண்டு வருகிறோம். ஆனால் இன்று வரையிலும் பொதுத்துறை வங்கிகள் போராடிக் கொண்டு தான் இருக்கின்றன. சொல்லப்போனால் அதன் 52 வார குறைந்த விலையை நோக்கி வர்த்தகமாகிக் கொண்டுள்ளன.
இதுவும் சரிவுக்கு காரணம்
இவ்வங்கிகள் சொத்து தரக் கவலைகள், குறைந்த கடன், வணிகச் சூழல் உள்ளிட்ட பலவும் கவலையளிக்கும் விதமாகவே உள்ளன. இதுவும் பங்கு விலை சரியக் காரணமாக அமைந்துள்ளன. இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் இந்த வங்கிக் பங்குகளில் பெரும்பாலும் அரசே வைத்துள்ளது.
அரசின் பங்குகள்
இந்தியன் ஒவர்சீஸ் வங்கியில் 95.84 சதவீத பங்கும், யூகோ வங்கியில் 94.44 சதவீதம் பங்கும். பேங்க் ஆப் மஹாராஷ்டிரா வங்கியில் 93.33 சதவீத பங்கும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 92.39 சதவீத பங்கும், பஞ்சாப் & சிந்த் வங்கியில் 83.06 சதவீத பங்கும் வைத்துள்ளன. இந்த நிலையில் இந்த வங்கிகளில் சில சந்தையில் இருந்து மூலதனத்தினை திரட்ட ஒப்புதலை பெற்றுள்ளனர்.