கொரோனா மக்களையும் நாட்டையும் பாடாய்ப்படுத்தினாலும், இவர்களுக்கு நல்ல காலம் என்று மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர். ஆம் கடந்த 4 வருடமாக மொபைல் இண்டர்நெட் பயன்பாடு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் அதிகரித்துவிட்ட நிலையில் பிராட்பேண்ட் சேவை அளிக்கும் நிறுவனங்கள் கடுமையான வர்த்தகச் சரிவையும், வருமான இழப்பையும் சந்தித்தது வந்தது.
இந்நிலையில் கொரோனா இந்திய மக்களை வீட்டில் முடக்கியதன் மூலம் பிராட்பேண்ட் சேவை தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 4 வருடத்திற்குப் பின் இத்துறை நிறுவனங்கள் பெரிய அளவிலான வர்த்தக வளர்ச்சியைக் கண்டுள்ளது.
லாக்டவுன்
இந்தியா முழுவதும் லாக்டவுன் செய்யப்பட்டுள்ள நிலையில் மக்கள் வீட்டில் முடங்கியிருக்கும் நிலையில் பிராட்பேண்ட் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். அதுமட்டும் அல்லாமல் இந்தியாவில் இருக்கும் பல கோடி ஊழியர்கள் தற்போது வீட்டில் இருந்து பணியாற்றி வரும் நிலையில் இண்டர்நெட் டேட்டா மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையும் பிராட்பேண்ட் சேவையில் அதிகரித்துள்ளது.
வேகமான இண்டர்நெட்
இந்தியாவில் கடந்த 5 வருடத்தில் மொபைல் இண்டர்நெட் வேகத்தின் அளவு மிகப்பெரிய மாற்றத்தைச் சந்தித்தாலும், ஒரு நாளுக்குக் குறிப்பிட்ட அளவிலான டேட்டா மட்டுமே பயன்படுத்த முடியும். மக்கள் தற்போது வீட்டிலேயே இருக்கும் காரணத்தாலும் அதிகளவில் டேட்டா பயன்படுத்தும் காரணத்தாலும் ஒரு நாளுக்கான தரவு போதுமானதாக இல்லை.
இதன் காரணமாகப் பல லட்ச மக்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதற்காகப் புதிய இணைப்பும், போதிய டேட்டா வேண்டும் என்பதற்காகப் பிராட்பேண்ட் சேவையை அதிகளவில் பயன்படுத்தத் துவங்கியுள்ளனர்.
2016 முதல்..
2016இல் ஜியோ அறிமுகம் செய்யப்பட்ட பின்பு இந்தியா முழுவதும் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் இணைய வேகமும் அதிகமான காரணத்தால் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரவே இல்லை.
2016இல் இருந்து 19 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற அளவிலேயே இன்று வரை இத்துறை வர்த்தகமாகி வருகிறது.
புதிய வாடிக்கையாளர்கள்
இப்படியிருக்கும் சூழ்நிலையில் தான் கொரோனா இத்துறையை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்துள்ளது. கடந்த 40 நாட்களில் புதிய பிராட்பேண்ட் பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும், குறிப்பாக நகரங்களில் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெரிய அளவிலான வளர்ச்சியைச் சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
டேட்டா பயன்பாடு
இதேபோல் கடந்த 40 நாட்களில் பிராட்பேண்ட் இணைப்பில் டேட்டா பயன்பாடு 25 முதல் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.