இந்தியாவில் இனி தயாரிக்கப்படும் கார்களில் எந்த எரிபொருளைப் போட்டாலும் இயங்கும் வண்ணம் கார் இன்ஜின்களைத் தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு அடுத்த சில மாதங்களில் புதிய உத்தரவை வெளியிட உள்ளது.
இந்தப் பொருளாதாரம், ரூபாய் மதிப்பு எனப் பலவற்றுக்கும் மிக முக்கியச் சுமையாக இருக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி சுமையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இப்புதிய முடிவை எடுத்துள்ளது.
நித்தின் கட்கரி அறிவிப்பு
இன்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நித்தின் கட்கரி வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த 3 முதல் 4 மாதத்தில் அனைத்துக் கார் உற்பத்தியாளர்களும் தங்களது வாகனத்தைப் பிளக்ஸ் இன்ஜின் கொண்டு தயாரிக்க வேண்டும் எனத் தான் உத்தரவை வெளியிட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
பிளக்ஸ் இன்ஜின்
பிளக்ஸ் இன்ஜின் கொண்ட கார்கள் தயாரித்தால் ஒன்றுக்கும் அதிகமாக எரிபொருள் அதாவது, பெட்ரோல், டீசல், பயோ டீசல் என எந்தப் பொருள் பயன்படுத்தினாலும் வாகனங்களை எளிதாக இயங்க முடியும். இதன் மூலம் எரிபொருள் இறக்குமதியில் பெரும் மாற்றத்தைப் பார்க்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
கட்டாயம்
மேலும் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான நித்தின் கட்கரி நடப்பு நிதியாண்டின் 3வது காலாண்டுகள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிளக்ஸ் இன்ஜின் கொண்ட கார்களை அறிமுகம் செய்வதில் தாங்க உறுதியாக இருப்பதாகவும். இதை அனைவருக்கும் கட்டாயமாக்கவும் முடிவு செய்துள்ளோம் எனவும் கட்கரி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் பயன்பாடு
இந்தியாவில் மாசுபாட்டை அதிகரிக்கும் எரிபொருளை பயன்படுத்துவதை நிறுத்தவும், தீங்கு விளைவிக்கும் உமிழ்வுகள் வெளியாவதைத் தடுக்கும் விதமாகவும், இதேவேளையில் நுகர்வோருக்கு மலிவான விலையில் கிடைக்கும் எரிபொருள் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகப் பிளக்ஸ் இன்ஜின் பயன்படுத்தவும் திட்டத்தைக் கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பயோ எதனால்
மேலும் இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை 110 ரூபாய் வரையில் விற்கப்படும் நிலையில் பயோ எதனால் வெறும் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாற்று எரிபொருள் திட்டத்தின் மூலம் மாசுப்பட்டை குறைப்பது மட்டும் அல்லாமல் அன்னிய செலாவணியும் பாதுகாக்க முடியும் என நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
கிரீன் ஹைட்ரஜென்
இதேபோல் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களுக்குத் தற்போது இருக்கும் பெட்ரோல் பங்குகளிலேயே பயோ எரிபொருட்களை விற்பனை செய்ய அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டு உள்ளது எனவும், இதேபோல் கிரீன் ஹைட்ரஜென் மூலம் கனரக வாகனங்களை இயக்கவும் அரசு திட்டமிட்டு உள்ளது என நித்தின் கட்கரி தெரிவித்துள்ளார்.
2050 இலக்கு
எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் பியூயல் செல் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் பெட்ரோல், டீசல் பயன்பாடு முழுமையாக நிறுத்த முடியும் எனத் தெரிவித்துள்ளார்.