நடப்பு ஆண்டில் இன்னும் என்னெவெல்லாம் நடக்குமோ? மக்களை பாடாய்படுத்தி வருகின்றது. ஒரு புறம் வாட்டி வதைக்கும் கொரோனா. மறுபுறம் வீழ்ச்சி கண்டு வரும் பொருளாதாரம், பணப்புழக்கச் சரிவு, வேலையின்மை, விலை வாசி ஏற்றம் என எதை எடுத்தாலும், மக்களுக்கு எதிராகவே உள்ளது.
இதற்கிடையில் மக்கள் தாங்கள் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.
மக்களுக்கு இந்த லாக்டவுன் காலத்தில் சற்றே ஆறுதல் கொடுக்கும் விதமாக, ஆறுமாத காலம் இஎம்ஐ அவகாசத்தினையும் ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்தது. ஆகஸ்ட் 31வுடன் முடிவடைந்த இந்த காலகட்டத்திற்கு வட்டிக்கு வட்டி வசூல் செய்வோம் என வங்கிகள் கிளம்பவே, மக்கள் நீதிமன்றத்தினை நாடினர். உச்ச நீதிமன்றமும் மக்களுக்கு ஆதரவாக, வட்டிக்கு வட்டி என்பதை தடை செய்தது.
வட்டிக்கு வட்டி தள்ளுபடி
ஆரம்பத்தில் வட்டிக்கு வட்டி என்பதை தடை செய்ய முடியாது என்பதை மத்திய அரசு கூறியது. அப்படி வட்டியை தள்ளுபடி செய்தால், வங்கிகளின் ஸ்திரத்தன்மை பாதிக்கும் என்றும் கூறியது. ஆனால் அதன் பின்னர் கடனுக்கான வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு அனுமதி கொடுத்தது. ஆனால் இதற்கு சில கெடுபிடிகளையும் விதித்தது.
எவ்வளவு கடன்?
மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 2020 வரையிலான கால கட்டத்தில் செலுத்தப்படாத இ எம் ஐ தொகைக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடியினை, 2 கோடி ரூபாய்க்கு கீழ் கடன் வாங்கியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் கூறியது. இது தனி நபர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் இது குறித்தான புதிய வழிமுறைகளை மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது, வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
என்னென்ன கடனுக்கு இந்த வட்டி சலுகை?
இந்த புதிய வழிகாட்டுதலில் கடன் தொகையானது, 2 கோடி ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இது வீட்டுகடன், கல்விக் கடன், கிரெடிட் கார்டு கடன்கள், வாகன கடன்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை, நீடித்த நுகர்வோர் பொருட்கள் வாங்கிய கடன் ஆகியவை இந்த திட்டத்தின் கீழ் வரும்.
மத்திய அரசுக்கு செலவு
அதோடு இந்த சலுகையை பெறுவதற்கு முன்பு, கடனை முறையாக செலுத்தியவர்களுக்கு தான் இந்த திட்டம் பொருந்தும். அதோடு தடைகாலத்தினை பெறாதவர்களுக்கும், இந்த திட்டம் பொருந்தும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த தொகையை வரவு வைத்த பிறகு, இந்த தொகையை கடன் வழங்குனர்கள் மத்திய அரசிடம் கோரும். இந்த திட்டத்தினை அமல்படுத்த மத்திய அரசு 6,500 கோடி ரூபாயினை செலவிட வேண்டியிருக்கும் என்றும் இதனையறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்த நிலையில் வட்டிக்கு வட்டி தள்ளுபடியை தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பை இன்று மத்திய அரசு வெளியிட்டுள்ளது.