பொதுவாக பங்கு சந்தை என்றாலே பலர் சூதாட்டம் என்பார்கள். அதிலும் அதில் உள்ள ப்யூச்சர் & ஆப்சன் என்றாலே கண்னை கட்டி காட்டில் விட்டது போல் இருக்கும்.
இப்படி இருக்கும் பட்சத்தில் மும்பை பங்குச் சந்தையின் இந்தியா ஐஎன்எக்ஸ் (INX ) மற்றும் தேசிய பங்குச் சந்தையின் ஐஎஃப்எஸ்சி (IFSC) ஆகிய இரு சர்வதேச சந்தைகளிலும், இந்திய ரூபாய் - அமெரிக்க டாலர் F&O வர்த்தகத்தினை, இன்று (INR-USD Futures and Options contracts) குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காணொளிக் காட்சி வாயிலாக அறிமுகப்படுத்தியுள்ளார்.
இதன் மூலம் இந்திய ஐஎன்எக்ஸ் உலகெங்கிலும் மூலதனத்தினை திரட்டுவதற்கான ஒரு முக்கிய மையாக மாறலாம் என்று எதிர்பார்ப்பதாக இதன் தலைவர் ஆஷிஷ்குமார் சவுகான் கூறியுள்ளார்.
குஜராத் சர்வதேச நிதித் தொழில்நுட்ப நகரத்தின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தில் தொடங்கப்பட்ட இந்த INR-USD F&O வர்த்தகமானது, அனைத்து நேர மண்டலங்களிலும் 22 மணி நேரமும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் மூலம் உலகளாவிய பங்களிப்பை இந்தியாவுக்கு பெற்றுத் தருவதோடு, இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தை உலகத்துடன் இணைக்கவும் இது வழிவகை செய்யும் என்றும் கூறப்படுகிறது.