கடந்த 2019 - 20ம் ஆண்டிற்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு நாளை ( டிசம்பர் 31) கடைசி நாளாகும்.
மேலும் டிசம்பர் 31க்கு பிறகு தாக்கல் செய்பவர்களுக்கு அபராதம் விதிகப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே போதிய அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவகாசம் கொடுக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
இந்த நிலையில் இணையம் மூலமாகவும், தனது ட்விட்டர் பதிவின் மூலமாகவும் வருமான வரித்துறையும் அலர்ட் செய்து வருகின்றது. அதாவது நீங்கள் வருமான வரி தாக்கல் செய்திருப்பீர்கள் என நம்புகிறோம். அப்படி செய்யாவிட்டால் கால தாமதம் செய்ய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது. அதோடு வருமான வரி தாக்கலை இன்றே செய்திடுங்கள் எனவும் கூறியுள்ளது.
கால அவகாசத்தினை நீட்டிக்க கோரிக்கை
ஏற்கனவே பலமுறை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த முறையும் நீட்டிப்பு இருப்பது கடினம் தான். இந்த நிலையில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தினை நீட்டிக்கப்பட வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவலாக கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. முன்னாள் வர்த்தக அமைச்சரான சுரேஷ் பிரபுவும், இது தொடர்பாக மத்திய நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
வர்த்தகம் பாதிப்பு
கொரோனா காரணமாக வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கோரிக்கைகள் வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக பல தொழிற்சங்கங்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பல்வேறு தரப்பினரும் இந்த காலக்கெடுவை நீட்டிக்க கோரியுள்ளனர்.
குறிப்பாக ஜிஎஸ்டிக்கான வருடாந்திர அறிக்கைக்கு ஜனவரி 31ம், வருமான வரி தாக்கலுக்கான கால அவகாசத்தினை மார்ச் 31 வரையிலும் நீட்டிக்க கோரியுள்ளனர்.
வருமான வரி தாக்கல்
ஆனால் நிதியமைச்சகமே 2019 - 20ம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கலை கடந்த திங்கட்கிழமை நிலவரப்படி, 4.37 கோடி பேர் தாக்கல் செய்துள்ளதாக தனது பதிவில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் நடப்பு ஆண்டில் கொரோனாவின் காரணமாக பொருளாதாரம் பெரும்பாலும் சீர்குலைந்துள்ளது. கொரோனாவினை கட்டுப்படுத்தும் விதமாக லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக வேலையின்மை, பொருளாதார மந்த நிலை, நிச்சயமற்ற நிதி சூழல் போன்ற பலவும் பின்னடைவுக்கு வழிவகுத்தன.
இந்த பின்னடைவை சமாளிக்க இந்திய அரசு பலவேறு நடவடிக்கைகள எடுத்தது. இதன் ஒரு பகுதியாகத் தான் அரசு வருமான வரி தாக்கல் செய்யும் தேதியினையும் நீட்டித்தது.
இதிலும் மாற்றமில்லை
இதற்கிடையில் ஜிஎஸ்டி வரியை தவிர்ப்பதற்காக போலி விலை பட்டியலை வரி செலுத்துவோர் பரவலாக பயன்படுத்தி வருவது கண்டறியப்பட்டது. இதனையடுத்து நிதியமைச்சகம் ஒரு புதிய விதிமுறையை அமல்படுத்தியது. அதன்படி மாதத்திற்கு 50 லட்சம் ரூபாய் விற்றுமுதலை கொண்ட வரத்தகர்கள் மட்டுமே தாங்கள் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகையில் 1% ரொக்கமாக செலுத்த வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரும், சிறிய அளவிலான விநியோகஸ்தர்கள் யாரும் பாதிப்படையவில்லை என்றும் கூறியுள்ளது. ஆக நிதியமைச்சகம் இந்த அறிவிப்பிலும் மாற்றம் செய்யப்படவில்லை.
நீட்டிப்பு சந்தேகம் தான்
அதோடு நிதியமைச்சகத்தின் ட்விட்டர் பதிவுகள் தொடர்ந்து வருமான வரியை தாக்கல் செய்யாதவர்கள் விரைவில் தாக்கல் செய்யுங்கள் என்றே கூறி வருவது, இதற்கு மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்படுமா என்ற சந்தேகத்தினையே எழுப்பியுள்ளது.