டெல்லி: போர்ப்ஸின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 4 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
இந்த பட்டியலில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41 வது இடத்தினை பிடித்துள்ளார்.
இதே முன்னணி ஐடி நிறுவனமான ஹெச்சிஎல்லின் தலைமை செயல் அதிகாரியான ரோஷினி நாடார், பயோகான் நிறுவனர் கிரண் மஜூர்தார் மற்றும் லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரானா ரேணுகா ஜக்தியானி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
உலகின் சக்தி வாய்ந்த பெண்கள்
அமெரிக்காவில் இருந்து வெளிவரும் போர்பஸ் பத்திரிகையின் உலகின் மிகவும் சக்திவாய்ந்த 100 பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 17வது ஆண்டாக வெளியாகும் இந்த பட்டியலில் இந்த ஆண்டு, 30 நாடுகளை சேர்ந்த பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், ஜெர்மனியின் சான்சிலர் ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மூன்றாவது இடத்தில் கமலா ஹாரிஸ்
ஐரோப்பிய மத்திய வங்கியின் தலைவர் கிறிஸ்டின் லகார்ட் இரண்டாவது ஆண்டாக 2வது இடத்தில் உள்ளார். அமெரிக்க துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ் 3வது இடத்தில் உள்ளார். மேலும் நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் 32வது இடத்திலும், தைவானின் ஜனாதிபதி சாய் இங்-வென் 37வது இடத்திலும் உள்ளனர்.
இந்திய பெண்கள் எத்தனையாவது இடம்
இந்தியா பெண்களில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹெச்சிஎல் தலைமை செயல் அதிகாரி ரோஷினி நாடார் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இடம் பெற்றுள்ள நிர்மலா சீதாராமன் 41வது இடத்தையும், ரோஷினி நாடார் 55வது இடத்தையும் பிடித்துள்ளனர். பயோகான் நிறுவனர் கிரண் மஜூர்தார் 68வது இடத்திலும், லேண்ட்மார்க் குழுமத்தின் தலைவரானா ரேணுகா ஜக்தியானி 98 வது இடத்திலும் இடம் பெற்றுள்ளனர்.
அரசியல்வாதிகளும் உண்டு
இந்த ஆண்டு பட்டியலில் 17 புதுமுகங்கள் இடம்பெற்றுள்ளனர். அதோடு இந்த பட்டியலில் 10 நாட்டு பெரும் தலைவர்களும், 38 தலைமை நிர்வாக அதிகாரிகளும், 5 எண்டர்டெயினர்களும் உள்ளனர். இவர்கள் தவிர கொரோனா பரவலுக்கு மத்தியில், உலகை வீழ்ச்சியிலிருந்து மீட்கும் அரசியல்வாதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications