கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் அறிவிப்பு மூலம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை அடைந்துள்ள நிலையில், இதில் இருந்து மீண்டு வர மத்திய அரசை புதிதாகப் பணத்தை அச்சடித்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பணிகளைச் செய்ய ரிசர்வ் வங்கி முதல் முன்னாள் நிதியமைச்சரான ப.சிதம்பரம் வரையில் பரிந்துரை செய்தனர்.
இந்நிலையில் பணத்தை அச்சிடுவது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முடிவைத் தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
கொரோனா மூலம் ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகளைச் சரி செய்யப் புதிதாகப் பணத்தை அச்சிடும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பொருளாதார வளர்ச்சி
கொரோனா தொற்று மற்றும் லாக்டவுன் மூலம் நாட்டின் பொருளாதாரம் 2020-21ஆம் நிதியாண்டில் -7.3 சதவீதம் வரையில் சரிந்து மோசமான நிலையை அடைந்தது, இதுமட்டும் அல்லாமல் நாட்டில் கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்து, வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டனர்.
வளர்ச்சி திட்டங்கள்
இந்த மோசமான நிலையைச் சமாளிக்கக் கட்டுமானம், சேவைத் துறை, வர்த்தக விரிவாக்கம் ஆகிய வளர்ச்சி திட்டங்களுக்குச் செயல்படுத்தவும், அதற்கான நிதியைப் புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சடித்து நிதியை உருவாக்கப் பல பொருளாதார வல்லுனர்கள் பரிந்துரை செய்தனர்.
ரூபாய் நோட்டு அச்சிடும் திட்டம்
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் மத்திய அரசிடம் புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் ஏதேனும் உள்ளதா என்று மத்திய நிதியமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, இல்லை என உறுதியாகப் பதில் அளித்துள்ளார், இதோடு இந்த முடிவிற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
நாட்டின் பொருளாதார அடிப்படை
நாட்டின் பொருளாதார அடிப்படைகள் மிகவும் சிறப்பாக உள்ளது, லாக்டவுன் கட்டுப்பாடுகள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதேபோல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ள ஆத்மநிர்பார் பாரத் திட்டம் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்கு 2020-21நிதியாண்டின் முதல் பாதிக்குப் பின் திருப்பியுள்ளது.
செலவுகள் அதிகரிப்பு
ஆனால் இதேவேளையில் அரசின் செலவுகள் 2020-21ஆம் நிதியாண்டில் 34.5 சதவீதம் அதிகரித்துள்ளது, இதேபோல் ஹெல்த்கேர் துறைக்கான செலவுகள் அளவீடு சற்றும் எதிர்பார்க்காத வகையில் 137 சதவீதம் அதிகரித்துள்ளது.
பொருளாதார ஊக்கத் திட்டம்
பொருளாதாரப் பாதிப்புகளைச் சமாளிக்கப் புதிதாக ஜூன் 2021ல் 6.29 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதார ஊக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், புதிதாக ரூபாய் நோட்டுகளை அச்சிடும் திட்டம் தற்போதைய நிலையில் தேவை இல்லை எனத் தெரிவித்துள்ளார்.