டெல்லி: கொரோனாவின் தாக்கம் இன்றளவிலும் இந்தியாவில் குறைந்தபாடில்லை. நாட்டில் நிலவி வரும் மந்த நிலையினை போக்க மத்திய அரசு ஒரு புறம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும் தற்போது வரை பொருளாதாரம் மீண்டதாக தெரியவில்லை.
இந்த நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 12.30 மணிக்கு பத்திரிக்கையாளர்களை சந்திக்க விருக்கிறார்.
இந்த சந்திப்பில் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஊக்கத் தொகை பற்றிய அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது வரலாறு காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ள பொருளாதாரத்தினை மீட்டெடுக்க பயன்படும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய ஊக்கத்தொகை பற்றிய அறிவிப்பு இருக்கலாம்
என்ன தான் அரசு தொடர்ச்சியாக பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், இன்று வரையிலும் பொருளாதாரம் மீளுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. இந்த நிலையில் அவர் என்ன பேச இருக்கிறார் என்பது குறித்தான தெளிவான எந்த அறிக்கையும் இல்லை என்றாலும், நிச்சயம் பொருளாதார மந்த நிலையை போக்க புதிய நடவடிக்கைகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உற்பத்தி துறைக்கு சலுகை
அதிலும் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வீழ்ச்சியினை சந்தித்தது. இதற்கிடையில் ஏற்கனவே வட்டி குறைப்பு, ஊக்கத் தொகை, நிதி சலுகை என ஊக்குவிப்பு நடவடிக்கைகளை எடுத்தது.
அதே போல தொழில் துறையிலும் உற்பத்தி படு வீழ்ச்சி கண்டது. இதனை மீட்டெடுக்க, 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு 1.5 லட்சம் கோடி அளவிலான சலுகைகள் அளிக்க புதன் கிழமையன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த சலுகைகள் நிறுவனங்களின் உற்பத்தி அடிப்படையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
எந்தெந்த துறைக்கு சலுகை
குறிப்பாக மருத்துவம், மின்னணு, ஒயிட் கூட்ஸ், ஸ்பெஷலைஸ்டு ஸ்டீல், ஆட்டோமொபைல் துறை, தொலைத் தொடர்பு துறை, டெக்ஸ்டைல்ஸ், உணவு பொருட்கள் மற்றும் சோலார் பொரூட்கள் உற்பத்தி, மொபைல் பேட்டரி உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு சலுகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இத்துறைகளை ஊக்கப்படுத்த அடுத்த ஐந்து ஆண்டுகளில் 2 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் கூறியுள்ளார்.
எந்த துறைக்கு எவ்வளவு?
இந்த ஊக்கத் தொகையானது சோலார் மின் உற்பத்தி துறைக்கு 4,500 கோடி ரூபாயும், இரும்பு உற்பத்தி துறைக்கு 6,322 கோடி ரூபாயும், ஆட்டோமொபைல் துறைக்கு 57,042 கோடி ரூபாய் ஊக்கத் தொகையும், ஜவுளித் துறைக்கு 10,863 கோடி ரூபாயும், உணவு பொருட்கள் துறைக்கு10,900 கோடி ரூபாயும் வழங்கப்படும். இந்த திட்டத்தின் முதலீடுகள் வரத்து அதிகரிக்கும். இது சுயசார்பு இந்தியா திட்டத்தினை மேம்படுத்தும் என்றெல்லாம் கூறப்பட்டது.
என்ன சொல்ல போகிறார்?
எல்லாவற்றிற்கும் மேலாக நாட்டின் உற்பத்தி விகிதம் அதிகரிக்கும். தொழில்துறையும் மேம்படும். இதன் மூலம் ஏற்றுமதியினையும் அதிகரிக்க முடியும். ஆக நாம் இறக்குமதியினை மட்டும் நம்பாமல், மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியினை இதன் மூலம் அதிகரிக்க முடியும். ஆக மொத்தத்தில் இந்தியா யாரையும் நம்பாமல் தனித்து செய்பட முடியும். இது இந்தியாவினை சுயசார்பு இந்தியாவாக மாற்ற வழிவகுக்கும். இது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் வழிவகுக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.